லடாக் எல்லை: சீனா ஊடுருவலை வெற்றிகரமாக முறியடித்தோம்- எந்த நிலைமையையும் எதிர்கொள்வோம்: ராஜ்நாத்சிங்
டெல்லி: லடாக் எல்லையில் சீனா மேற்கொண்ட ஊடுருவலை வெற்றிகரமாக முறியடித்திருக்கிறோம்; எல்லையில் எந்த ஒரு நிலைமையையும் நம்மால் எதிர்கொள்ள முடியும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம் என லோக்சபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
லோக்சபாவில் சீனா ஊடுருவல் தொடர்பாக ராஜ்நாத்சிங் பேசியதாவது:
எல்லையில் சீனா மேற்கொள்ளும் மோதல்கள் அனைத்தும் கடந்த கால ஒப்பந்தங்களை மீறுவதாகும். நமது எல்லைகளில் பாதுகாப்பு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி தந்து வருகின்றனர்.
எல்லை வரையறையை சீனா ஒப்புக் கொள்ள மறுக்கிறது- பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை- ராஜ்நாத்சிங்
38,000 ச.கிமீ நிலம் ஆக்கிரமிப்பு
எல்லைப் பகுதிகளில் தற்போதைய நிலைமையை மாற்ற சீனா தன்னிச்சையாக முயற்சிக்கக் கூடாது என தூதரக ரீதியாக தெரிவித்துள்ளோம். அப்படி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒப்பந்தங்களை மீறுவதாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளோம். லடாக் பிராந்தியத்தில் 38,000 ச.கிமீ நிலப் பகுதியை சீனா ஆக்கிரமித்திருக்கிறது.
சீனாவின் ராணுவ குவிப்பு
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானால் 5,000 ச.கிமீ நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த நிலப்பரப்பு சீனாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அருணாச்சல பிரதேசத்தையும் சீனா உரிமை கோரி வருகிறது. ஏப்ரல் மாதம் முதலே எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் சீனா ராணுவ குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. மே மாதத்தில் ராணுவ நடமாட்டத்தை எல்லையில் சீனா அதிகரித்தது.
கால்வன் பள்ளத்தாக்கு மோதல்
மே மாதம் மத்தியில் கால்வன் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனா பல இடங்களில் ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கின்றனர். ஜூன் 15-ந் தேதியன்று கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் நமது ராணுவ வீரர்கள் உயிரைத் தியாகம் செய்திருக்கின்றனர். அதேநேரத்தில் சீன ராணுவத்துக்கும் நமது வீரர்கள் உயிரைக் கொடுத்து தக்க பதிலடி தந்துள்ளனர்.
பாதுகாப்பாக உள்ளன
தற்போதைய நிலையில் நமது எல்லைப் பகுதிகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றன. நமது ராணுவ வீரர்களை எண்ணி நாம் பெருமிதப்பட வேண்டும். சீனாவின் பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் போது, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் தயங்கமாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளோம்.
எந்த நிலைமையும் எதிர்கொள்வோம்
எல்லையில் எந்த ஒரு நிலைமையையும் எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதை இந்த சபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் நமது ராணுவ வீரர்களுடன் தோளோடு தோளாக நாம் நிற்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார். எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.