ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
டெல்லி: லடாக்கில் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங் ஆகிய பகுதிகளில் இருந்து தங்கள் படைகளை, வாகனங்களை பின்வாங்கச் செய்ய சீன ராணுவ அதிகாரிகள் மறுத்து விட்டனர் என்று கூறப்படுகிறது.
இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பல வீரர்கள் இறந்தனர்.
தொடர்ந்து எல்லையில் இருதரப்பு படையினரும் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. ராணுவ அதிகாரிகள் அளவில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து படைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடரும் பேச்சுவார்த்தை
பாங்காங் ஏரி கரையில் இரு தரப்புக்கும் இடையே சமீபத்தில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. கடந்த பத்து மாதங்களாக கிழக்கு லடாக்கில் எல்லை நிலைப்பாட்டிற்கு மத்தியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதலில் பங்கோங் ஏரி மையமாக உள்ளது. எல்லை பகுதிதிகளில் பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை தொடர்ந்தது.
படைகளை விலக்கிக் கொள்ள முடிவு
ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தையின் பலனாக பாங்காங் ஏரியின் வடக்கு கரையில் இந்திய, சீன ராணுவம் தங்களது வீரர்களை அங்கிருந்து விலகிக் கொள்ள ஆரம்பித்தன. இரு நாடுகளின் பீரங்கி டாங்கிகளும், போர் வாகனங்களும் அங்கு இருந்து திரும்பி செல்ல ஆரம்பித்தன. தொடர்ந்து பத்தாவது சுற்று பேச்சுவார்த்தையிலும் நல்ல முடிவே கிடைத்ததால் இது இரு தரப்பு இடையே முன்னேற்றத்தை வலுப்படுத்தியது.
11-வது சுற்று பேச்சுவார்த்தை
இந்த நிலையில் இந்தியா - சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 11-வது சுற்று பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கில் உள்ள சுஸ்ஹுல் பகுதியில் நேற்று காலை துங்கியது. சுமார் 13 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்தையில் கிழக்கு லடாக்கின் இதர பகுதிகளான ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங் ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ள சீன படைகளை திரும்பப் பெறும்படி இந்திய தரப்பு சீனாவிடம் வலியுறுத்தியது.
முரண்டு பிடிக்கும் சீனா
ஆனால் சீனா ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங் ஆகிய பகுதிகளில் இருந்து தங்கள் படைகளை, வாகனங்களை பின்வாங்கச் செய்ய சீன ராணுவ அதிகாரிகள் மறுத்து விட்டனர் என்று கூறப்படுகிறது. சீனாவின் இந்த செயல் தொடர் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
இந்திய ராணுவம் அறிக்கை
இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ' லடாக் எலையின் மற்ற பகுதிகளில் படைகள் விலக்கப்படும்போது இரு தரப்பின் அமைதி மற்றும் அமைதியை முழுமையாக மீட்டெடுப்பதை உறுதிசெய்யவும் முன்னேற்றத்தை செயல்படுத்தவும் வழிவகுக்கும். இரு தரப்பினரும் தங்கள் தலைவர்களின் ஒருமித்த கருத்துக்களிலிருந்து வழிகாட்டுதல் பெறுவது, மீதமுள்ள பிரச்சினைகளை விரைவாக பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தீர்வை நோக்கிப் பணியாற்றுவது முக்கியம் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது.