வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம்.. ஆயுதங்கள் பறிமுதல்... சீனாவின் திட்டம் அம்பலம்!!
டெல்லி: மியான்மர், தாய்லாந்து எல்லையில் அதிகளவிலான சீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சீனா தாக்குதல் நடத்த, கிளர்ச்சியை உருவாக்க திட்டமிட்டு இருந்ததா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த தகவல்கள் தெற்கு ஆசிய நாடுகளுக்கான தி இர்ரவாடி என்ற இதழில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைதியை குலைக்க சீனா பல ஆண்டுகளாக திட்டமிட்டு வருகிறது.
30 நொடியில் கண்டுபிடிக்கலாம்.. இந்தியாவிற்கு ஹைடெக் வல்லுநர்களை அனுப்பும் இஸ்ரேல்.. நெதன்யாகு அதிரடி
மத்திய அரசு கவலை:
இந்த வகையில் மியான்மர் மற்றும் தாய்லாந்து கிளர்ச்சியாளர்களுக்கு சீனா மறைமுகமாக உதவி வருகிறது. இதுகுறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. தற்போது சீனாவின் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது மத்திய அரசை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது.
மியான்மரில் கிளர்ச்சி:
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் மியான்மரில் கிளர்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் அரகன் ராணுவத்தைச் சேர்ந்தது இல்லை என்பது தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை அந்த ராணுவம் பயன்படுத்துவதும் இல்லை. பறிமுதல் செய்யப்பட்டவை அனைத்தும் நவீன தானியங்கி துப்பாக்கிகள்.
மியான்மர் கிளர்ச்சியாளர்கள்:
வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி செய்து வரும் கிளர்ச்சியாளர்கள் மியான்மரில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களைப் போன்றே மியான்மரில் கிளர்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் கிளர்ச்சியாளர்கள் அந்த நாட்டின் ராகினி என்ற இடத்தை மையமாக கொண்டுள்ளனர். இவர்கள் இருவருமே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களின் கொள்கைகளுக்கும் சவாலாக இருந்து வருகின்றனர். ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களில் ஊடுருவல் செய்வதற்கு சீனா வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பதால், டெல்லியை கவலை அடையச் செய்துள்ளது.
இந்திய தூதர் பேச்சுவார்த்தை:
ஆயுதங்கள் பறிமுதல் குறித்து கடந்த ஜூலை 20ஆம் தேதி, தாய்லாந்துக்கான இந்திய தூதர் சுசித்ரா துரை தாய்லாந்து நாட்டின் டக் மாகாணத்தின் கவர்னர் அன்சிட் சாம்புன்தரட் என்பவருடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், இந்திய பாதுகாப்பு ஏஜென்டுகள் மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த ஆயுதங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம்:
மியான்மருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் அரகன் ராணுவம் வடகிழக்கு மாநில எல்லையில் இருந்து மியான்மரின் சின் மற்றும் ராகினி மாநிலம் வரை விரிந்துள்ளது. எல்லையில் கிளர்ச்சியாளர்களை தூண்டிவிட்டு தனது இலக்கை அடைவதற்கு சீனா முயற்சித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் தீவிரவாதிகளுக்கும் சீனாதான் காலம் காலமாக ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது என்ற புள்ளி விவரங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது கொரோனா தொற்று நாடுகளை அச்சுறுத்தி வரும்போதும் சீனா தனது எல்லையில் இருக்கும் நாடுகளுடன் சர்ச்சையை அதிகரித்து வருகிறது.