விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல்.. இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு 5 நாட்கள் சிபிஐ காவல்
டெல்லி: அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் 5 நாள் சிபிஐ காவலில் அடைக்கப்படுகிறார்.
குடியரசு தலைவர், பிரதமர் மற்ற விவிஐபிகளுக்கு ரூ.3600 கோடி செலவில் 12, அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட், சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க 2007ம் ஆண்டு, மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்டவர் கிறிஸ்டியன் மைக்கேல். அப்போது, அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து கிறிஸ்டியன் மைக்கேல் 30 மில்லியன் யூரோஸ் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக, அமலாக்கத்துறையால், 2016ம் ஆண்டு ஜூன் மாதம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்தியாவிலுள்ள பலருக்கும், ஹெலிகாப்டர் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கின. புகார்களால், ஒப்பந்தம் போடப்பட்ட 6 வருடங்களுக்கு பிறகு, அதை மத்திய அரசு ரத்து செய்தது.
இந்த நிலையில், அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் டீல் இடைத்தரகர்களில் ஒருவரான கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து இன்று இரவு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். நாடு கடத்தப்படுவதை எதிர்த்து கிறிஸ்டியன் மைக்கேல் துபாய் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்த நிலையில் நேற்று இரவு, சிறப்பு விமானத்தின் மூலம், டெல்லி கொண்டுவரப்பட்டார் மைக்கேல் கிறிஸ்டியன்.
இரவே, சிபிஐ அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதன்பிறகு இன்று மதியம் அவர் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மைக்கேலிடம் விசாரிக்க வேண்டியிருப்பதாக சிபிஐ தரப்பில் கோரியதை ஏற்று, 5 நாட்கள் சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.