சோனியா பெயரை சொன்ன ஹெலிகாப்டர் ஊழல் இடைத்தரகர்.. அமலாக்கத்துறை திடுக் தகவல்
டெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புள்ள கிறிஸ்டியன் மைக்கேல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி பெயரை குறிப்பிட்டதாக அமலாக்கத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
2007ம் ஆண்டு, மன்மோன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, குடியரசு தலைவர், பிரதமர் மற்ற விவிஐபிகளுக்கு ரூ.3600 கோடி செலவில் 12, அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட், சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்டவர் கிறிஸ்டியன் மைக்கேல்.
கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக, அமலாக்கத்துறையால், 2016ம் ஆண்டு ஜூன் மாதம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து கிறிஸ்டியன் மைக்கேல் 30 மில்லியன் யூரோஸ் லஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஹெலிகாப்டர் ஊழல்
மேலும், இந்தியாவிலுள்ள பலருக்கும், ஹெலிகாப்டர் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கின. முறைகேடுகள் புகாரால், ஒப்பந்தம் போடப்பட்ட 6 வருடங்களுக்கு பிறகு, அதை மத்திய அரசு ரத்து செய்தது. 2016ல் முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி லஞ்சம் பெற்ற புகாருக்காக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் டீல் இடைத்தரகர்களில் ஒருவரான கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து டிசம்பர் 4ம் தேதி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோனியா காந்தி பெயர்
இந்த வழக்கு விசாரணை இன்று, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையின்போது சோனியா காந்தி பெயரை கிறிஸ்டியன் மைக்கேல் குறிப்பிட்டதாகவும், ஆனால், எந்த விஷயத்திற்காக அவர் சோனியா பெயரை குறிப்பிட்டார் என்பதை விசாரணையின் இப்போதைய கட்டத்தில் தெரிவிக்க முடியாது என்றும், அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் அந்த ஆர்?
மேலும் இந்த டீலிங்கில் பிக் மேன் என்று அழைக்கப்படுவர் R என்ற சங்கேத மொழியில் அழைக்கப்படுவதாகவும், கிறிஸ்டியன் மைக்கேல் மற்றும் இந்த டீலிங்கில் தொடர்புள்ள மற்றவர்கள் இந்த சங்கேத மொழியில்தான் உரையாடிக்கொண்டதாகவும், அமலாக்கத்துறை தெரிவித்தது. மேலும், துண்டு பேப்பர் வழியாக கிறிஸ்டியன் மைக்கேல் வழக்கறிஞர், அவருக்கு வாக்குமூலம் அளிப்பது தொடர்பாக வழிகாட்டி வருவதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதையடுத்து, காலை மற்றும் மாலை தலா 15 நிமிடங்கள்தான் கிறிஸ்டியன் மைக்கேலை அவரது வழக்கறிஞர் சந்திக்க வேண்டும், 3 அடி தொலைவில் இருந்தபடிதான் பேச வேண்டும் என்று, நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இத்தாலி பெண் மகன்
மற்றொரு முக்கிய தகவலாக கிறிஸ்டியன் மைக்கேல் தனது வாக்குமூலத்தில், 'இத்தாலி பெண்ணின் மகன்' என்றும் குறிப்பிட்டதாகவும், அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று கூறியதாகவும், அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். முன்னதாக, கிறிஸ்டியன் மைக்கேல், சோனியா காந்தி பெயரை சொல்ல வேண்டும் என்று இந்திய விசாரணை அமைப்புகள் நெருக்கடி கொடுப்பதாக அவர் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.