பிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி!
டெல்லி: நாடு முழுவதும் பிப். 28-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 50%க்கும் அதிகமான இருக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,09,63,259 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 21,70,420 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் பொதுவாக கொரோனா தாக்கம் குறைந்துள்ளது.
இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது. இந்த தளர்வுகளுடனான லாக்டவுன் பிப்ரவரி 28-ந் தேதி வரை நாடு முழுவதும் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்
திரையரங்குகளில் 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளன.
நீச்சல் குளங்கள் முழுமையாக இயங்கலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான அனைத்து போக்குவரத்துகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள்' ஆகியவற்றுடன் 2021 பிப்ரவரி 1 முதல் 2021 பிப்ரவரி 28 வரை நடைமுறையில் இருக்கக்கூடிய உத்தரவு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது.
கொவிட்-19 பாதிப்புகள் நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பெருந்தொற்றின் பரவலுக்கு எதிராக அடைந்துள்ள பலன்களை தக்கவைத்துக் கொள்வதே இந்த வழிகாட்டுதல்களின் முக்கிய நோக்கமாகும்.
கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு:
* மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டு பகுதிகள் மாவட்ட அதிகாரிகளால் கவனமுடன் வரையறுக்கப்பட வேண்டும்.
* இந்தக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
சரியான கொவிட் நடத்தை வழிமுறைகள்:
* சரியான கொவிட் நடத்தை வழிமுறையை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.
* முகக்கவசங்கள் அணிதல், கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், சமூக இடைவெளி ஆகியவை கண்காணிக்கப்பட்டு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுதல்:
கட்டுப்பாடுப் பகுதிகளுக்கு வெளியே கீழ்கண்ட நடவடிக்கைகள் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளோடு அனுமதிக்கப்படும்
* அரங்கத்தின் 50 சதவீத கொள்ளளவுடன், 200 பேருக்கு மிகாமல் சமூக/ஆன்மிக/விளையாட்டு/பொழுதுபோக்கு/கல்வி/கலாச்சார/மதம் சார்ந்த கூட்டங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போது இவை சம்பந்தப்பட்ட மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின் அடிப்படையில் அனுமதிக்கப்படும்.
* 50 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போது இன்னும் அதிகம் பேர் அனுமதிக்கப்படுவர். இது குறித்த திருத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால், உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்த பின்னர் வெளியிடப்படும்.
* விளையாட்டு வீரர்களுக்கு நீச்சல் குளங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைவரும் அனுமதிக்கப்படுவர். இது குறித்த திருத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சகத்தால், உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்த பின்னர் வெளியிடப்படும்.
* வர்த்தகக் கூட்டங்களில் தளர்வுகள் குறித்த நிலையான செயல்பாட்டு வழிமுறையும் அறிவிக்கப்படும்
* சர்வதேச விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளும் நிலைமையை பொருத்து தளர்த்தப்படும்.
பயணக் கட்டுப்பாடுகள்:
மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களிடையேயான போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இல்லை. எந்த தனிப்பட்ட அனுமதியும் தேவையில்லை.
ஆரோக்கிய சேது:
ஆரோக்கிய சேது செயலியின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.
அனைத்து விதிகளூம் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளும் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்.