நாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் திருத்தங்களுடன் இந்திய குடியுரிமை மசோதா.. மத்திய அரசு ஒப்புதல்
டெல்லி: இந்துக்கள், முஸ்லிம் அல்லாத சிறுபான்மை அகதிகளுக்கான இந்திய குடியுரிமை வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில் அந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றுவது பிரதமர் மோடி அரசுக்கு கடும் சவாலாக இருக்கும்.
பிரதமர் மோடியின் முந்தைய ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தில் இந்த மசோதா தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த மசோதாவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறினார். இந்த மசோதா 370 வது பிரிவினை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வந்ததை போன்றது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த மசோதா குறித்த முக்கிய விவரங்களை இப்போது பார்ப்போம்
இந்துக்கள்
இந்த குடியுரிமை (திருத்த) மசோதா இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மதசார்ப்பற்ற கொள்கை
இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தற்போதுள்ள சட்டங்களை இந்த மசோதா திருத்துகிறது என்றும் இந்த மசோதா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு முரணானது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
மத துன்புறுத்தல்
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய சட்ட மசோதாவில் "சட்டவிரோத குடியேறியவர்கள்" மற்றும் அண்டை நாடுகளில் மத துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பின்னர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் ஆகியோரை தெளிவாக வேறுபடுத்தும் அறிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
கடும் எதிர்ப்பு
பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக மொத்தமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்களின் பாதிப்பு ஏற்படும் என வடகிழக்கு மாநிலங்களில் பூர்வ குடிமக்கள் இந்த மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்துள்ளனர்.
ராஜ்யசபாவில் கடினம்
லோக்சபாவில் இந்த மசோதாவை பாஜக எளிதாக நிறைவேற்றிவிடும். ஆனால் ராஜ்யசபாவில் பாஜக அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. எனவே குடியுரிமை மசோதாவை நிறைவேற்றுவது நிச்சயம் சவாலாக இருக்கும்.
காங்கிரஸ் எதிர்ப்பு
இந்த மசோதாவை முன்னதாக லோக்சபாவில் நிறைவேற்றிய போது காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி கட்சி, இடதுசாரிகள் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் எதிர்த்தன. இந்நிலையில் மாநிலங்களவையில் வாக்களிக்கும் போது அதிமுக போன்ற கட்சிகள் இந்த மசோதாவிற்கு சமநிலை வகித்து வெளிநடப்பு செய்ய வாய்ப்பு உள்ளது. .
பாஜக எம்பிக்களுக்கு
உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும்போது பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
கட்டாய நிலை
ராஜ்நாத் சிங் நேற்று பேசுகையில். "இந்தியாவை சுற்றியுள்ள மூன்று அண்டை நாடுகளும் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகள். அங்கு முஸ்லிமல்லாதவர்களே தொடர்ந்து மதத் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள் இது அவர்களை இந்தியாவில் தஞ்சம் புகுவதற்கான கட்டாய நிலைக்கு தள்ளியிருக்கிறது. எனவே ஆறு சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்குவது தர்மம்" என்று கூறியிருந்தார்.