வட இந்தியாவுக்கு மட்டுமல்ல, நாட்டுகே நீங்க உள்துறை அமைச்சர்.. அமித்ஷாவை பார்த்து சொன்ன தயாநிதி மாறன்
Recommended Video
டெல்லி: காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று நீங்கள் சொல்கிறீர்கள், அப்படியானால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் உங்கள் கூற்றுப்படி இந்திய பகுதிதானே? எனவே ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வரும் முஸ்லிம்களுக்கு நீங்கள் குடியுரிமை கொடுப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார் தயாநிதி மாறன்.
லோக்சபாவில், இன்று, குடியுரிமை (திருத்த) மசோதாவை எதிர்த்து திமுக எம்.பி. தயாநிதி மாறன் உரையாற்றினார். அவர் கூறுகையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைத்த, இந்த சட்டத் திருத்த முன்வரைவு, "அரை மனதுடன்" இருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் நிலை என்ன என்பது பற்றி மசோதாவில் குறிப்பைக் காணவில்லை. அரசு முஸ்லிம்கள் மீதான வெறுப்பில் உள்ளது என்பது மசோதா மூலம் தெளிவாகிறது.
நான் பாஜக ஆட்சிக்கு வாக்களிக்காத ஒரு மாநிலத்திலிருந்து வந்துள்ளேன். இந்த மசோதா பற்றி வடக்கு மற்றும் தெற்கு வித்தியாசமாக சிந்திக்கின்றன.
சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறுவதற்கோ அல்லது அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கோ நீங்கள் இதுவரை எதுவும் செய்யவில்லை. நீங்கள் உள்துறை அமைச்சராக இருப்பது வட இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு இந்தியாவிற்காகவுமான அமைச்சர் நீங்கள்.
மாலத்தீவும், இலங்கை போலவே நமது அண்டை நாடுதான்.அதுகுறித்தும் இந்த சட்ட மசோதாவில் எதுவும் இல்லை. 30 வருடங்களுக்கும் மேலாக தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளை என்ன செய்ய போகிறீர்கள்?
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் CABஇல் கிறிஸ்தவர்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. நாட்டில் சிறுபான்மையினரை பிளவுபடுத்த பாஜக கட்சி ஏன் முயல்கிறது என்று நான் கேட்க விரும்புகிறேன்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா!
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று நீங்கள் சொல்கிறீர்கள், அப்படியானால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் உங்கள் கூற்றுப்படி இந்திய பகுதிதானே? எனவே ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வரும் முஸ்லிம்களுக்கு நீங்கள் குடியுரிமை கொடுப்பீர்களா? இல்லை. உங்களுக்கு ஒரே நிலைப்பாடுதான் இருக்கிறது. எங்களுக்கு முஸ்லிம்கள் வேண்டாம் என்பதுதான் அந்த நிலைப்பாடு. இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.
முன்னதாக, மசோதா மீது பேசிய டி.ஆர்.பாலு, இலங்கை தமிழர்களை மசோதாவில் சேர்க்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், திமுக வெளிநடப்பு செய்தது.