குடியுரிமை சட்ட திருத்தம்.. நாளை ராஜ்யசபாவில் தாக்கல்.. அமித் ஷா பிளான்.. சட்டமாக வாய்ப்புள்ளதா?
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாளை காலை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாளை காலை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மீதான விவாதம் நாளை 6 மணி நேரம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.
ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது. இதனால் இந்த மசோதா கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. நேற்று இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
மசோதா நிறைவேறியது
இந்த சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது. இதில், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன. இதனால் லோக்சபாவில் எளிதாக சட்ட மசோதா நிறைவேறியது. இந்த நிலையில் நாளை ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
எப்படி நிறைவேறும்
ராஜ்யசபாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 102 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் அங்கு மசோதாவை நிறைவேற்ற 120 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 245 இடங்களை கொண்ட மாநிலங்களவையின் தற்போதைய பலம் 238 ஆகும்.
மசோதா நிறைவேறுமா
இதனால் பாஜக தனது மசோதாவை நிறைவேற்ற மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அவையில் பிற நட்பான கட்சிகளின் உதவியை பாஜக சமயத்தில் நாடும் அல்லது அவர்களை வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்ய வைத்து ,அவையின் பலத்தை குறைத்து மசோதாவை நிறைவேற்றும்.
அதிமுக ஆதரவு
இதில் அதிமுக கட்சி மசோதாவை ஆதரவு அளித்து வாக்களிக்க முடிவு செய்துள்ளது. மொத்தம் அதிமுகவிற்கு 11 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர். இதனால் பாஜகவின் பலம் 113 ராஜ்ய சபா எம்பிக்கள் ஆகியுள்ளது. இன்னும் 6 எம்பிக்கள் ஆதரவு இருந்தால் பாஜக மசோதாவை நிறைவேற்றிவிடும்.