போர்க்களமாக மாறிய டெல்லி.. இரவு முழுக்க நடந்த போராட்டம்.. உச்சம் அடையும் குடியுரிமை சட்ட திருத்தம்!
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் காரணமாக நேற்று டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகமே போர்க்களம் போல மாறியது.
Recommended Video
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் காரணமாக நேற்று டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகமே போர்க்களம் போல மாறியது. இரவு முழுக்க அங்கு மாணவர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் போலீசாரும் இரவு நேரத்தில் அங்கு மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டம் வந்தால் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று அவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இந்த மாணவர்கள் போராட்டத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல மாணவர்கள் முயன்றார்கள். மாணவர்களின் இப்போராட்டத்தில் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்.
போலீஸ் தாக்குதல்
அப்போது அங்கு வந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதற்கு போலீசார், போராட்டக்காரர்களில் சில கும்பல் கற்களை வைத்து தாக்கியதால்தான் நாங்கள் திருப்பி தாக்கினோம். அவர்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் கொண்டு செல்லும் விதமாகவே தாக்கினோம் என்று குறிப்பிட்டார்கள்.
என்ன பேருந்து
நேற்று நடந்த போராட்டத்தில் மூன்று பேருந்துகள் மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்திவிடப்பட்டது.இந்த செயலை செய்தது மாணவர்கள் என்று கூறி போலீசார் இவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். நூலகம் வரை சென்று கூட போலீசார் மாணவர்களை தாக்குதல் நடத்தினார்கள்
என்ன தாக்குதல்
லத்திகளை கொண்டு அங்கிருந்த மாணவர்களை மோசமாக தாக்கியுள்ளனர். அதேபோல் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். அதேபோல் வானத்தை நோக்கியும் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
மருத்துவமனையில் அனுமதி
பெண் மாணவிகள் பலரும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்தனர். சில மாணவர்களுக்கு கால், கைகள் உடைந்துள்ளது . சிலருக்கு கண்களில் கூட அடிபட்டு இருக்கிறது. இதில் சில மாணவிகள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிரடி
இந்த நிலையில் மாணவர்களை போலீசார் தாக்கிய விஷயம் பெரிய பிரச்சனையானது. மாணவர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நேற்று இரவே ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் உள்ள போலீஸ் தலைமையகம் முன் போராட்டம் நடத்தினார்கள். அதிகாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடந்தது. மக்கள் பலரும் இதற்கு ஆதரவு அளித்தனர்.
கைது விடுதலை
இந்த போராட்டம் காரணமாக நேற்று 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இரவு முழுக்க அவர்கள் ஜெயிலில் வைக்கப்பட்டு இருந்தனர். இன்று அதிகாலை அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
மற்ற பகுதிகள்
இந்த போராட்டத்தை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், பீகார், கவுகாத்தி ஐஐடி, சென்னை ஐஐடி என்று பல இடங்களில் போராட்டம் தீயாக பரவியது. இன்று இவர்கள் எல்லோரும் சேர்ந்து மீண்டும் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.