குடியுரிமை சட்ட திருத்தம்.. இடைக்கால தடை விதிக்க மறுப்பு.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்: சுப்ரீம் கோர்ட்
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம், திமுக உட்பட 60 பேர் தொடுத்த வழக்கில் மத்திய அரசுக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம், திமுக உட்பட 60 பேர் தொடுத்த வழக்கில் மத்திய அரசுக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஜனவரி இரண்டாம் வாரத்திற்குள் இதில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றமே மறுத்துவிட்டது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சட்டம் காரணமாக இந்தியாவில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இதன் மூலம் குடியுரிமை பெற முடியும். அதேபோல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் மட்டுமே இங்கு குடியுரிமை பெற முடியும்.
ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது. இதனால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் பலர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இந்த மசோதா பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் இதற்கு எதிராக மக்கள் நீதி மய்யம், திமுக ஆகியோரின் வழக்குகள் உட்பட மொத்தம் 60 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு 14க்கு எதிராக இந்த சட்டம் இருக்கிறது என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
திமுக, மக்கள் நீதி மய்யம், இந்தியன் முஸ்லீம் லீக், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த மசோதாவை ஆதரித்து அவையில் வாக்களித்த அசோம் கன பரிஷத் அமைப்பும் இதற்கு எதிராக வழக்கு தொடுத்து உள்ளது.இதன் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் பிஆர் கவாய், சூர்யா காந்த் ஆகியோர் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் உடனடியாக சட்டத்திற்கு தடை விதிக்க நீதிபதிகள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் உடனடியாக சட்டத்திற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும் மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். ஜனவரி இரண்டாம் வாரத்திற்குள் இதில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.