மாநில அரசின் கையில் ஒன்னும் இல்லை.. எதுவும் செய்ய முடியாது.. குடியுரிமை சட்டத்திற்கு இவ்வளவு பலமா!
குடியுரிமை சட்டத்தை சில மாநில அரசுகள் எதிர்த்தாலும் கூட அதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
டெல்லி: குடியுரிமை சட்டத்தை சில மாநில அரசுகள் எதிர்த்தாலும் கூட அதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மத்திய அரசின் சட்டம் இது என்பதால் இதை கண்டிப்பாக மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மசோதாவிற்கு எதிராக நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.
மசோதாவாக இருந்த சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின் அதிகாரபூர்வ சட்டமாக்கி உள்ளது. இதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 5 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அனுமதி இல்லை
இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று என்று கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்து இருக்கிறது. மத்திய அரசு வேண்டுமானால் இந்த சட்டத்தை கொண்டு வந்து இருக்கலாம், ஆனால் நாங்கள் இந்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று இவர்கள் கூறி உள்ளனர்.
என்ன உண்மை
ஆனால் உண்மையில் இந்த சட்டத்தை மொத்தமாக மாநில அரசுகள் எதிர்க்க முடியாது. இந்திய அரசியலைப்பில் மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் சட்டங்கள், மத்திய கட்டுப்பாட்டில் இருக்கும் சட்டங்கள் என்று நிறைய சட்டங்கள் இருக்கிறது. அந்த வகையில் குடியிரிமை சட்டம் மத்திய கட்டுப்பாட்டிலிருக்கும் சட்டம் ஆகும்.
என்ன சட்டம்
சட்டபிரிவு 256 மற்றும் 257ன் படி இந்த சட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசு மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். இதை மாநில அரசுகள் எதிர்க்க முடியாது. இந்தியாவின் அனைத்து மாநிலத்திற்கும் இந்த சட்டம் பொருந்தும். உதாரணமாக பாஸ்போர்ட் விதிகள் மத்திய அரசு விதியாக இருந்தாலும் மாநில அரசு இதற்கு கட்டுப்படுவது போல. அதனால் இந்த சட்டம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பலமான ஒரு சட்டம் ஆகும்.
உதவி தேவை
அதே சமயம் இந்த சட்டத்தை மாநில அரசின் உதவி இல்லாமல் மத்திய அரசால் செயல்படுத்த முடியாது. அதாவது மாவட்ட கலெக்டர்கள், வட்டாச்சியர்கள், போலீசார் ஆகிய மாநில அரசின் நிர்வாக பணியாளர்கள் உதவியுடன்தான் இந்த சட்டத்தை செயல்படுத்த முடியும். இவர்கள்தான் ஒரு பகுதியில் உள்ள இஸ்லாமியர்களை கணக்கிட்டு, அவர்களிடம் பத்திரங்கள், ஆவணங்களை வாங்க முடியும்.
போலீஸ்
அதன்பின் இவர்களை மாநில போலீசார் சோதனை செய்ய வேண்டும். எப்படி பாஸ்போர்ட் வெளியுறவுத்துறை மூலம் வழங்கப்பட்டாலும், தமிழக போலீஸ் சோதனை செய்கிறதோ அப்படிதான் இந்த சட்டமும். அதனால் இந்த சட்டத்தை முழுக்க செயல்படுத்த வேண்டும் என்றால் மாநில அரசின் உதவியும் தேவை.
கண்டிப்பாக அவசியம்
கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டது.இது போன்ற மாநிலங்களில் அரசின் உதவி இன்று மத்திய அரசு எப்படி இந்த குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றும். அரசு என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.