கலவரத்தை கைவிடுங்கள்.. நாளையே விசாரிக்கிறோம்.. டெல்லி போலீசுக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி!
டெல்லியில் போலீசால் நேற்று கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Recommended Video
டெல்லி: டெல்லியில் போலீசால் நேற்று கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த பிரச்சனை தொடர்பாக நாளை மனுதாக்கல் செய்தால் விசாரணை நடத்துவோம், ஆனால் கலவரம் முடிந்தால் மட்டுமே முழு விசாரணை நடக்கும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்திற்கு வெளியே பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது.
இதனால் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் கடுமையாக காயம் அடைந்தனர்.
புகார் எப்படி
இந்த நிலையில் மாணவர்களை நேற்று போலீசார் தாக்கியது தொடர்பான புகாரை அவசர வழக்காக விசாரிக்க டெல்லி ஹைகோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து டெல்லி போலீசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மனு அளித்தார்.
உச்ச நீதிமன்றம்
அதில் டெல்லி போலீசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிய வேண்டும். டெல்லி போலீஸ் மாணவர்கள் மீது தாக்கியதை முன்னாள் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். கலவரம் செய்து, மாணவர்கள் மீது பழியை போட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று நிறைய கோரிக்கைகளை மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
தலைமை நீதிபதி
இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே வழக்கை தாமாக முன் வந்து பதிய முடியாது, இன்று அவசரமாக விசாரிக்க முடியாது என்று கூறிவிட்டார். தலைமை நீதிபதி கூறியதாவது, சட்ட ஒழுங்கை பாதுகாக்கவே போலீஸ் உள்ளது. டெல்லியில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். யார் கலவரம் செய்தது, யார் அமைதியாக போராடியது என்று இப்போது சொல்ல முடியாது.
கலவரம்
போராட்டம் என்ற பெயரில் கலவரம் செய்ய கூடாது. போராட்டம் என்று பொதுச் சொத்துக்களை சேதப்படுத்த கூடாது. வன்முறை போராட்டங்களை அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை. பேருந்துகளை கொளுத்தியது மிகப்பெரிய தவறு.
நடக்க கூடாது
நாட்டில் ஏற்கனவே நிறைய கலவரம் நடக்கிறது.டெல்லியிலும் அதேபோல் நடக்க வேண்டாம். கலவரம் எப்படி முடியும், என்ன நடக்கும் என்று எங்களுக்கு தெரியும். கற்களை வைத்து மாறி மாறி தாக்கி இருக்கிறார்கள்.கலவரம் நின்றால் மட்டுமே வழக்கை விசாரிப்பேன்.
நாளை விசாரணை
கலவரம் மொத்தமாக நிற்கட்டும், பின்பு பார்க்கலாம். மனுதாக்கல் செய்யுங்கள், நாளை விசாரிக்கிறோம். இல்லை தெருவிற்கு சென்று போராட வேண்டும் என்றால் போராடுங்கள். அமைதியான போராட்டம் மட்டுமே பலன் தரும்.