குடியுரிமை சட்டத் திருத்தம்.. வட கிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பால் இறங்கி வரும் மத்திய அரசு
டெல்லி: குடியுரிமை (திருத்தம்) 2016 சட்டம் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்து வரும் நிலையில், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை சற்று தளர்த்தியுள்ளது.
ராஜ்யசபாவில் அறிமுகம் செய்யப்பட்டு, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திருத்த த்தில், வெளிநாடுகளில் இருந்து 2014, மார்ச் 31ம் தேதி வரை குடியேறியுள்ள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் உட்பட வட கிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டில் இருந்து சற்று இறங்கி வந்துள்ளது.
மாநில அரசின் சம்மதம்
மாநில அரசின் சம்மதம் இன்றி, வெளிநாட்டினருக்கு நேரடியாக இந்திய குடியுரிமை வழங்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அசோக் பிரசாத் கூறியதாவது: வட கிழக்கு மாநிலங்களில், இந்த சட்டத் திருத்தம் தொடர்பாக தவறான கருத்துக்கள் பரவியுள்ளன. யாாருக்கும் உடனடியாக குடியுரிமை வழங்குவது இந்த சட்டத்தின் நோக்கம் இல்லை.
ஒரே இரவில் இல்லை
சில குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும், மக்களை தேசிய நீரோட்டத்தில் கொண்டுவருவதே நோக்கம். அதுவும் கூட சில நிபந்தனைகள் அடிப்படையில்தான். யாருமே ஒரே நாள் இரவில் இந்திய குடிமகனாக மாற்றப்பட மாட்டார்கள்.
பின்னணி
மாநில அரசு, குறிப்பிட்ட குடிமகனின் பின்னணி குறித்து விசாரித்து, சிபாரிசு செய்தால்தான், அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த ஜனவரி 8ம் தேதி லோக்சபாவில் இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு வட கிழக்கு மாநில கட்சிகள் மட்டுமின்றி, பீகாரில், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதள கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
7 வருடங்கள் போதும்
வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்கள் 12 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்தால் இந்திய குடிமகன்களாக்கப்படுவார்கள். ஆனால் புதிய சட்டத் திருத்தத்தின்படி, இந்த கால வரம்பு 7 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 2014, டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பாக இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு இந்த சட்டத் திருத்த அம்சங்கள் பொருந்தும்.