வழக்கை எப்படி தள்ளுபடி செய்தீர்கள்.. தலைமை நீதிபதிக்கு எதிராக புகார் அளித்த பெண் கமிட்டிக்கு கடிதம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து புகார் அளித்த பெண், நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார்.
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து புகார் அளித்த பெண், நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அவர் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது தொடுக்கப்பட்ட பாலியல் வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர் மீது 35 வயதாகும் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போட்பே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு இதை விசாரித்தது.
அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க அவசியம் இல்லை, மேலும் நீதிபதிகள் இந்த விசாரணை குழு அறிக்கையை வெளிப்படையாக வெளியிட தேவையில்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்திரா ஜெய்சிங் vs உச்சநீதிமன்றம் என்ற வழக்கின் அடிப்படையில், நீதிபதிகள் விசாரணை குழு அறிக்கையை வெளிப்படையாக வெளியிட தேவையில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த பெண் தற்போது விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகளுக்கும் கடிதம் ஒன்று அனுப்பி இருக்கிறார். அதன்படி, எனக்கு இந்த தீர்ப்பின் விவரங்களை படிக்க உரிமை உண்டு. இந்த வழக்கு எதன் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள எனக்கு முழு உரிமை இருக்கிறது.
தலைமை நீதிபதிக்கு எதிரான விசாரணை விவரம் வெளியாகாதது ஏன்? இந்திரா ஜெய்சிங் வழக்கில் நடந்தது என்ன?
என்னுடைய வழக்கில், சரியான விளக்கத்தை என்னிடம் அளிக்காமல் தள்ளுபடி செய்தது சட்டத்திற்கு முரணானது என்று அந்த பெண் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த தீர்ப்பிற்கு, புகார் அளித்த பெண் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். நீதியின் மீதான நம்பிக்கை அற்றுப் போய் விட்டதாக புகார் அளித்த பெண் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடிதம் காரணமாக தற்போது புதிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.