வரலாற்றில் முதல் முறை.. ஹைகோர்ட் நீதிபதிக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு.. தலைமை நீதிபதி பச்சைக்கொடி
டெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.என். சுக்லா மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்ற, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சிபிஐக்கு அனுமதியளித்துள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுக்லா, மீது தனியார் மருத்துவக் கல்லூரிக்கு உதவியதாக, புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட, நீதிபதிகள் குழு, 2017ம் ஆண்டில் கொடுத்த அறிக்கையில், சுக்லா மீதான குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக தெரிவித்தது.
சிட்டிங் நீதிபதி மீது தலைமை நீதிபதியின் அனுமதியின்றி சிபிஐ வழக்கு பதிவு செய்ய முடியாது என்பது சட்டம். எனவே, உயர்நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க அனுமதி கோரி, சிபிஐ தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில்தான், சுக்லா மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு அனுமதியளித்துள்ளார், ரஞ்சன் கோகாய்.
சிட்டிங் நீதிபதி ஒருவரை சிபிஐ அல்லது மத்திய புலனாய்வுப் பிரிவு ஒன்று விசாரிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜினாமா செய்யுங்கள் அல்லது தானாக முன்வந்து ஓய்வு பெறலாம் என்று, நீதிபதி சுக்லாவை, முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேட்டுக் கொண்டார்.
ஆனால் சுக்லா மறுத்தார். இதையடுத்து, 2018 ல் நீதித்துறை பணிகள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டன. பெயருக்கு மட்டுமே அவர் நீதிபதியாக இருக்கிறார்.
நீதிபதி சுக்லாவை பதவியிலிருந்து நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த மாதம் கடிதம் எழுதினார்.
லக்னோவில் உள்ள ஜி.சி.ஆர்.ஜி இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் 2017-18 ஆம் ஆண்டுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்தது. ஆனால் இந்த உத்தரவு வெளியான சில நாட்களுக்கு பிறகு, நீதிபதி சுக்லா தலைமையிலான பெஞ்ச் இந்த உத்தரவில் மாற்றங்களை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தரமற்ற உள்கட்டமைப்பு மற்றும் பல நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியது குறித்த அறிக்கையினால்தான், மாணவர்கள் சேர்க்கை, அந்த மருத்துவக் கல்லூரிக்கு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.