ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும் என்று இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும் என்று இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து மக்கள் மத்தியில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசு கொண்டு வரும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், அரசு எடுக்கும் நடவடிக்கைகள், கொள்கைகளை பலர் இதன் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் நிறைய முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒவ்வொரு அலுவலகத்தில் இருக்கும் தகவல் அலுவலரும் பதில் அளித்து ஆக வேண்டும். ஆனால் சில முக்கியமான கேள்விகளை இதன் மூலம் கேட்க முடியாது. பாதுகாப்பு தொடர்பான கேள்விகள், ராணுவம் தொடர்பான கேள்விகளை இதில் கேட்க முடியாது.
ஆர்டிஐ சட்டம்
இந்த ஆர்டிஐ சட்டத்தை பயன்படுத்த நிறைய இயக்கங்கள் இருக்கிறது. நிறைய சமூக ஆர்வலர்கள் ஆர்டிஐ சட்டம் மூலம் கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி 2017ல் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால் உச்ச நீதிமன்றம் தொடர்பான கேள்வி ஒன்றை ஆர்டிஐ மூலம் கேட்டு இருந்தார்.
நினைத்தது நடந்தது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கே வெற்றி.. எப்படி தெரியுமா?
சொத்து விவரம்
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்துக்கள் குறித்த விவரம் வேண்டும் என்று அவர் தகவல் ஆணையத்திடம் கேட்டு இருந்தார். இதற்கு உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க மறுத்துவிட்டது. இது தொடர்பான தகவலை எல்லாம் பதிலாக தர முடியாது என்று கூறினார்.
சுபாஷ் மத்திய அரசு
இதையடுத்து சுபாஷ் மத்திய தகவல் ஆணையத்தை அணுகினார். இதற்கு தகவல் ஆணையம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வருகிறது. அதனால் சுபாஷுக்கு தேவையான தகவலை அளியுங்கள் என்று கூறியது. அவர் கேட்கும் தகவலை கொடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்திற்கு தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
ஹைகோர்ட்
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இதை ஒரு நீதிபதி அமர்வு டெல்லி ஹைகோர்ட்டில் விசாரணை செய்தது. அப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அலுவலகமும் வரும், அதனால் சுபாஷ் கேட்கும் தகவலை கொடுக்கலாம் என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இது உச்ச நீதிமன்றத்திற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு
இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இவர்கள் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். முன்னாள் வழக்கறிஞர்கள் உட்பட 3 பேர் மேல்முறையீடு செய்தனர். இதன் விசாரணை தீவிரமாக நடந்து, இறுதி விசாரணை கடந்த மாதம் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
தீர்ப்பு அமர்வு
இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் என்வி ரமணா, டி.ஒய். சந்திரசூட் , தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும்
அதில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும் என்று இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி தொடர்பான கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கலாம், உச்ச நீதிமன்றம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.