உன்னாவ்: பாதுகாப்பு கோரும் பெண்ணின் கடிதம்- உச்சநீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு!
டெல்லி: உன்னாவ் பாஜக எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் அனுப்பிய கடிதத்தை ஒப்படைக்காதது ஏன்? என்பது குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் தம்மை உன்னாவ் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். ஆனால் பெண்ணின் தந்தை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதில் பெண்ணின் தந்தை சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தற்போது குல்தீப் சிறையில் உள்ளார்.
மர்ம மரணங்கள்
ஆனாலும் புகார் கூறிய பெண்ணின் குடும்பத்தில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் புகார் தெரிவித்த பெண், அவரது தாயார், வழக்கறிஞர் உள்ளிட்டோர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.
மேலும் 2 பேர் பலி
இதில் பெண்ணின் தாயார் உட்பட 2 பேர் பலியாகினர். இது தொடர்பான விசாரணையில் திட்டமிட்ட படுகொலை முயற்சிதான் இந்த விபத்து என்பது அம்பலமானது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் இச்சம்பவம் எதிரொலித்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்
இதனிடையே தமக்கு பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த 12-ந் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியிருந்தார். இதுவும் புதிய சர்ச்சையானது. இதனை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஜூலை 12-ந் தேதி தமக்கு அந்த பெண் எழுதிய கடிதத்தை ஏன் தம்மிடம் தரவில்லை என்பதற்கு பதில் தர உச்சநீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
அறிக்கை தர உத்தரவு
ஒருவாரத்தில் இது தொடர்பாக பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கோகாய் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தினரை லாரியை ஏற்றி கொல்ல முயன்றது தொடர்பாக எம்.எல்.ஏ. குல்தீப் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. முன்னதாக பாஜகவில் இருந்து எம்.எல்.ஏ குல்தீப் சஸ்பென்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.