போர்க்களமான நீதிமன்றம்.. போலீஸ்- வழக்கறிஞர்கள் மோதல்.. நீதி விசாரணைக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள டிஸ் கஸாரி நீதிமன்றத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் சனிக்கிழமை நடந்த வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த குழு அமைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சனிக்கிழமை அன்று (நேற்று) டெல்லியில் உள்ள டிஸ் கஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் விவகாரத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பில் சென்றது. இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
இந்த வன்முறையில் டெல்லி வடக்கு இணை காவல்ஆணையர், 2 காவல் நிலையங்களின் கண்காணிப்பாளர்கள் உள்பட 20 போலீஸ்கார்கள் காயம் அடைந்தனர். இதேபோல் வழக்கறிஞர்கள் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இரண்டு வழக்கறிஞர்கள் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தனர். ஒட்டுமொத்தமாக சுமார் 50 பேர் காயம் அடைந்தனர்.
உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டா.. காப்பி அடிக்காதீங்க.. காலி ஆயிடுவீங்க!
வாகனங்கள் எரிப்பு
பிற்பகல் 2 மணி அளவில் சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 12 மோட்டார் சைக்கிள்கள், சிறைக்கைதிகளை ஏற்றிச்செல்லும் 8 வாகனங்கள், வழக்கறிஞர்கள் அமரும் இருக்கைகள், வழக்கறிஞர்கள் கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதேபோல் நீதிமன்ற கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீபிடித்து எரிந்தது.
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு
போலீசுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த இந்த கலவரம் டெல்லி மாநகரையே நேற்று உலுக்கியது. இதனிடையே இந்த வன்முறை தொடர்பாக விளக்கம் அளித்துள்ள டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் தினேஷ் குமார்,. டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎன் படேல் இந்த விஷயத்தை மிக தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளார். அத்துடன் வழக்கறிஞர்கள் குறித்தும் அவர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார் என்றார்.
பார்கவுன்சில்
இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வன்முறை தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசு, பார் கவுன்சில் ஆப் இந்தியா, பார் கவுன்சில் ஆப் டெல்லி, டெல்லி மாநில அரசு, டெல்லி உயர்நீதிமன்ற, மாவட்ட நீதிமன்றங்களின் அனைத்து பார் கவுன்சில்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது
விசாரணை குழு
இந்நிலையில் டிஸ் கஸாரி நீதிமன்றத்தில் போலீஸ் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையே நடந்த கலவரம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்பி கார்க் தலைமையில் விசாரணை குழு அமைத்தும் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் டெல்லி போலீஸ் கமிஷ்னர் உடனடியாக வழக்கறிஞர்களின் வாக்குமூலத்தை வைத்து உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.