பீகாரை அலறவிடும் மின்னல்கள்.. மோசமான நிலைக்கு என்ன காரணம்.. விஞ்ஞானிகள் கூறுவதை இனியாவது கேளுங்க!
டெல்லி: இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் மிகவும் மோசமான வானிலை மாற்றங்கள் ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதீத வெப்பம், அதீத வெள்ளப்பெருக்கு ஆகியவற்றுக்கு பருவநிலை மாற்றம்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதை கட்டுக்குள் வைத்திருக்க சில யோசனைகளையும் விஞ்ஞானிகள் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் பீகாரில் கடந்த 10 நாட்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த 10 நாட்களில் கொடூர மின்னலுக்கு பீகாரில் 147 பேர் பலியாகிவிட்டனர். நேற்று முன் தினம் மட்டும் 25 பேர் இறந்துவிட்டனர்.
திருவனந்தபுரத்தில் இன்று முதல் மிகக் கடும் கட்டுப்பாடுகளுடன் டிரிபிள் லாக்டவுன் அமல்
பலி
இதுகுறித்து பீகார் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் லக்ஷ்மேஸ்வர் ராய் கூறுகையில் கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலத்தில் மின்னலால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என 215 பேர் பலியாகிவிட்டனர். இதுகுறித்து வானிலை ஆய்வாளர்களிடம் கேட்டபோது கொடூர மின்னல் ஏற்பட காரணம் பருவநிலை மாற்றம் என்கிறார்கள்.
பருவநிலை மாற்றம்
பருவநிலை மாற்றத்தால் பூமி அதிகளவில் வெப்பமடைந்து இது போன்ற மின்னல் வெட்டுகளை ஏற்படுத்துவதாக கூறினார்கள் என்றார் ராய். இன்னும் 48 மணி நேரத்தில் அதிக மின்னல் வெட்டுகள் ஏற்படும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இறப்பு எண்ணிக்கை
பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை ஆண்டு பருவநிலையால் மின்னல் வெட்டுகள் ஏற்படுவது இயற்கைதான். இதனால் மாநிலத்தில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த முறை பீகாரில் மின்னல் வெட்டுகளுக்கு இறந்தோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
அதிக எண்ணிக்கை
அதிலும் பருவமழை தற்போதுதான் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இந்த பருவமழை காலத்தில் 170 பேர் மின்னலால் இறந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு பருவமழை தொடக்கத்திலேயே 147 பேர் வரை இறந்துள்ளனர். இது மிகவும் அதிகமான எண்ணிக்கையாகும் என்றனர்.
இடி
அதிக மின்னலும் இடியும் வளிமண்டலத்தில் நிலையற்றத்தன்மை, அதிக வெப்பம், அதிக அளவு ஈரப்பதம் ஆகியவை நிலவுவதால் ஏற்படுகிறது. எந்த பகுதியில் மின்னல் வெட்டுகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கண்டறியும் மொபைல் செயலியை உருவாக்கியுள்ளதாக கூறும் அதிகாரிகள் பெரும்பாலான விவசாயிகளிடம் நவீன செல்போன்கள் இல்லை என்றார்கள். தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தகவலின்படி கடந்த 2018-ஆம் ஆண்டு நாடு முழுவதும் மின்னலால் 2,300 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.