அரசு உருவாக்கிய வேலைவாய்ப்பு வெப்சைட்டால் டெல்லி பொருளாதாரம் மீள்கிறது.. கெஜ்ரிவால் ஹேப்பி
டெல்லி: டெல்லி அரசு துவங்கியுள்ள வேலைவாய்ப்பு வெப்சைட்டால், பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் பலன் பெறுவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார், அரவிந்த் கெஜ்ரிவால். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லியின் பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டுவருவதற்கு கைகோர்க்க வேண்டும் என்று டெல்லி வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
டெல்லியின் இரண்டு கோடி மக்களும் இணைந்து, ஒத்துழைத்து, கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும், நாம் சமூக இடைவெளியை உறுதிசெய்து, முகக் கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும். ஏனென்றால் நாம் முன்னெச்சரிக்கையாக இல்லாவிட்டால், கொரோனா மீண்டும் அதிகரிக்கக்கூடும்.
டெல்லியின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்க முடியும் என்பதில் நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் வணிகங்கள் மற்றும் தொழில்கள் இல்லாமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மக்கள் கடந்த காலங்களில் பெரிய சவால்களை ஏற்றுக்கொண்டு அவற்றை வென்றுள்ளனர். இந்த பொருளாதார சவாலையும் நாம் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், டீசல் மீதான வாட் வரியை 30%திலிருந்து 16.75%மாக குறைக்கும் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது, இது பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் முக்கியமான பங்களிப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
பல தொழில்முனைவோர், வர்த்தகர்கள் டீசல் விலையை குறைக்கக் கோரினர். ஏனெனில் டீசல் விலைகள் மக்களின் பட்ஜெட்டை பாதிக்கின்றன, மேலும் வர்த்தகம் மற்றும் வணிகங்களை பாதிக்கின்றன. எனவே வாட் குறைப்பு நடவடிக்கை, டெல்லியின் பொருளாதாரத்திற்கு ஒரு உந்துதலைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
கலக்கிட்டாரு கெஜ்ரிவால்.. வாட் வரி பாதியாக குறைப்பு.. டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.8 சரிவு
டெல்லியின் பொருளாதாரத்தை உயர்த்த, கடந்த வாரத்தில், நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். வேலைவாய்ப்பு போர்ட்டலையும் தொடங்கியுள்ளோம். இது வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளிகள் இடையில் ஒரு இணைப்புத்தளமாக செயல்படுகிறது.
தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடந்த பல நாட்களாக மூடப்பட்டதால், தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர். இப்போது ஆலைகளை துவங்குகிறார்கள். ஆனால் பணியாளர்களை கண்டறிவதில் சிரமம் உள்ளது. அதே மாதிரிதான், தொழிலாளிகளுக்கு, ஆலைகளை கண்டறிவதில் சிரமம் உள்ளது. இரண்டுக்கும் இணைப்பு பாலமாக 'ரோஜ்கார் பஜார்' என்ற போர்ட்டலைத் தொடங்கினோம்.
வேலைவாய்ப்பு வெப்சைட்டில் (ரோஜ்கார் பஜார்) சுமார் 7577 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன, 2,04,785 வகையான வேலை வாய்ப்புகள் குறித்து இங்கு தகவல்கள் உள்ளன. , 4 நாட்களுக்குள், மேலும் 3,22,865 பேர் டெல்லி அரசின் வேலைவாய்ப்பு வெப்சைட்டில் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
ஒரு தொலைக்காட்சி சேனலில் நான் பார்த்த காட்சியை பகிர்ந்து கொள்கிறேன். ஜீன்ஸ் பேண்ட் உற்பத்தி பிரிவின் உரிமையாளர் ஒருவர், தன்னிடம் 35 பேர் வேலை பார்த்ததாகவும், அதில் 3 பேர் மட்டுமே இன்னும் வேலை செய்கிறார்கள், மீதமுள்ளவர்கள் வேலையை விட்டு வெளியேறிவிட்டனர்.. எனவே தொழிலாளர் பற்றாக்குறை இருந்தது. ஆனால் டெல்லி அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு வெப்சைட்டில், எனது ஆலையில், 35 வேலையிடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்தேன். 190 க்கும் மேற்பட்ட தொழிலாளிகளிடமிருந்து தொலைபேசி அழைப்புகளைப் பெற்றேன். வேலைக்கு சேர அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.. என்று கூறினார். இந்த காட்சியை பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. டெல்லி பொருளாதாரம் ஒரு பெரிய உந்துதலைப் பெறும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.