நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
டெல்லி: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளியுங்கள் என பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் நேற்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். கூட்டம் முடிவடைந்த பின்னர் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கோதாவரி- கிருஷ்ணா, பெண்ணையாறு- பாலாறு, காவிரி- வைகை- குண்டாறு ஆகிய நதிகள் காலதாமதமின்றி இணைக்க வேண்டும். கங்கை சீரமைப்பு திட்டம் போன்ரு காவிரி ஆற்றை சீரமைக்க நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்த தேவையான அனுமதிகளை வழங்கிட வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்களை உருவாக்கிடவும், நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுதலை தடுத்திட பழமையான நீர் ஆதாரங்களை மேம்படுத்திடவும், தேவையான நிதியினை அளித்திட வேண்டும்.
சென்னையில் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு தகுந்த நிதியையும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் நலன் கருதி இனி மருத்துவ மாணவ சேர்க்கைக்கு நீட் தேர்வினை தொடராமல் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது என்றார் முதல்வர்.