காவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
டெல்லி: டெல்லியில் ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் உடன் தமிழக முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசினார்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்தித்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து உள்ளார். முன்னதாக, மேகதாது அணை கட்ட அனுமதி தருமாறு அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய குமாரசாமி, தமிழக அரசின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டிய அவசியம் இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார்.
இந்தநிலையில், காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி நேரில் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க, டெல்லியில் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்தினார். 7 நிமிடங்கள் நடந்த பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமியின் சந்திப்பின் போது அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உடன் இருந்தனர். அப்போது, காவிரி பிரச்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு, தமிழகத்திற்கான நிதி தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான அமித்ஷாவை, அவரது இல்லத்திற்கு சென்று முதல்வர் பழனிசாமி சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில், மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தெரிகிறது. மாநிலத்திற்கு எந்த நிதி பலனையும் நிதி ஆயோக் ஒதுக்காததால், கூட்டத்தை புறக்கணிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.