Co Win: கோவின் செயலியில் பதிவு செய்தோருக்கே கொரோனா தடுப்பூசி
டெல்லி: கோவின் செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தை இன்று இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
முதற்கட்டமாக 30 கோடிக்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு 1075 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
கோவின் செயலி மூலம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. அது போல் இந்த செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடும் பணியை பார்வையிட அனுமதி அளிக்கப்படுகிறது. தினமும் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்.
Coronavirus Vaccine: தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடக்கம்
கோவின் செயலியின் முதன்மையான நோக்கமே கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தை கண்காணிக்க அரசுத் துறைகளுக்கு உதவுவதுதான். இந்த செயலி மூலமே தடுப்பூசி பெற விரும்புவோர் தங்களின் விவரத்தை பதிவு செய்து கொண்டு விண்ணப்பிக்க முடியும்.
கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றவே இந்த கோவின் என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் தடுப்பூசி தொடர்பான பயனாளிகளின் பதிவுகள் பராமரிக்கப்படும். அனைத்து தரப்பினராலும் கோவின் செயலியை பயன்படுத்த முடியாது. அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் போதுதான் அவற்றை டவுன்லோடு செய்ய முடியும்.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் Google Play Store அல்லது Apps Store லிருந்து கோவின் செயலியை சாதாரண மக்கள் பதிவிறக்கம் செய்து தங்களுடைய விவரத்தை பதிவு செய்யலாம். விரைவில் இந்தியாவில் உள்ளவர்கள் இந்த செயலியை பதிவிற்க்கம் செய்வதற்கான இணைப்பு வழங்கப்படும்.
கோவிட் 19 தடுப்பூசி பிரச்சாரத்தை திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பதற்கான கிளௌட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது கோவின். இதன் மூலம் தடுப்பூசி பயன்படுத்துபவர்களை நேரலையாக கண்காணிக்க முடியும். தடுப்பூசிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நேரத்தை குறிக்க முடியும்.
பயனாளிகள் தமது விவரத்தை செயலியில் பதிவேற்றியவுடன் தடுப்பூசி பெறுவோரின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வழங்கப்படும். இது தவிர தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்து மக்களுக்கு கியூஆர் கோடு முறையில் சான்றிதழ் வழங்கப்படும்.