நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு- ஒடிஷாவின் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டு சிறை
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1999-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சராக இருந்தவர் திலீப் ராய். இவரது பதவி காலத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
ஜார்க்கண்ட் சுரங்க ஒதுக்கீடு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிடிஎல் - Castron Technologies Ltd நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு என்பதுதான் வழக்கு. இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பராஷர் விசாரித்து இன்று தீர்ப்பளித்தார்.
3 ஆண்டுகள் சிறை தண்டனை
இவ்வழக்கில் திலீப் ராய் உள்ளிட்ட 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 1990களில் ஜனதா தள் கட்சியில் இருந்து விலகி பிஜூ ஜனதா தளத்தில் இருந்தவர் திலீப் ராய். பின்னர் காங்கிரஸ், பாஜகவிலும் இணைந்து பணியாற்றினார் திலீப் ராய். முன்னதாக 1985-ல் ஜனதா தள் எம்.எல்.ஏ.வாக ஒடிஷா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் திலீப் ராய். 1990-ல் பிஜூ பட்னாயக் அமைச்சரவையிலும் இடம்பெற்றார் திலீப் ராய்.
டெல்லி எம்.பி.
1996-ல் ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டு தேவகவுடா அமைச்சரவையில் இடம்பெற்றார். பின்னர் வாஜ்பாய் அரசில் நிலக்கரித்துறை இணை அமைச்சராக இருந்தார் திலீப் ராய். 2002-ல் நவீன் பட்நாயக்கால் பிஜு ஜனதா தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் திலீப் ராய். ஆனாலும் 2002-ல் பாஜக எம்.எல்.ஏக்கள், பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யானார் திலீப் ராய். 2004-ல் காங்கிரஸில் இணைந்த திலீப் ராய், 2009-ல் பாஜகவில் ஐக்கியமானார்.
மீண்டும் பீஜூ ஜனதா தளம்
2014-ல் பாஜகவின் ஒடிஷா எம்.எல்.ஏ.வாக மீண்டும் தேர்வானார். 2018-ல் பாஜகவில் இருந்தும் விலகினார் திலீப் ராய். இதனைத் தொடர்ந்து தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய திலீப் ராய், 2019-ல் நவீன் பட்நாயக்கை சந்தித்து மீண்டும் பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார். ஒடிஷாவில் ஹோட்டல் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனங்களை நடத்தி வருபவர் திலீப் ராய் என்பது குறிப்பிடத்தக்கது.