பாஜகவில் இணைந்த பிபின் ராவத்தின் சகோதரர் அஜய் ராவத்.. உத்தரகாண்ட் தேர்தலில் திடீர் ட்விஸ்ட்
டெல்லி : உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் திடீர் திருப்பமாக மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இளைய சகோதரரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான கர்னல் அஜய் ராவத் உத்தரகாண்ட் முதல் அமைச்சர் புஷ்கர் சிங் தாமியின் முன்னிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட 14 பேர் வீரமரணம் அடைந்தனர்.
நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிபின் ராவத் மட்டுமல்ல அவரது குடும்பமே ராணுவத்தில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை ராவத், அவரது இளைய சகோதரரான அஜய்ராவத் ராணுவத்தில் கர்னலாக பணியாற்றியவர்.
மோடி முதல் ஹேம மாலினி வரை.. உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக சார்பில் 30 ஸ்டார் பரப்புரையாளர்கள்!
உத்தரகாண்ட் தேர்தல்
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி தொடங்கி மார்ச் வரை நடைபெறுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான் போட்டி நடக்கிறது. இதில் தற்போதுவரை இரு கட்சிகளும் மாறி மாறி முன்னேறி வருகின்றன.
கர்னல் அஜய் ராவத்
இந்நிலையில் தற்போது உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர் பாஜகவினர். பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய நன்கு அறிமுகமான முகம் தேவை என அந்தக் கட்சி தலைமை முடிவெடுத்தது. இந்நிலையில் நாடு நன்கு அறிந்த மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இளைய சகோதரரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான கர்னல் அஜய் ராவத் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜகவுக்கு நம்பிக்கை
டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியின் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் அஜய் ராவத். இது தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவைகளின் போது பாஜகவுக்கு கைகொடுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மொத்தமுள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 35 தொகுதிகளையும், பாஜக 33 தொகுதிகளையும் கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அஜய் ராவத் இணைந்துள்ளதன் மூலம் மாநில மக்கள் மனதில் ஒருவித மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அம்மாநில ஊடகங்கள் கூறியுள்ளன.
பிரதமருக்கு நன்றி
பாஜகவில் இணைந்து அதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது தந்தை ஓய்வு பெற்றதற்கு பிறகு பாஜகவில் இணைந்து பணியாற்றியதாகவும் அவருக்குப் பிறகு தற்போது தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது எனவும், பாஜகவில் இணைந்ததற்காக நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன் என கூறியுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் புத்திசாலித்தனம் தன்னை மிகவும் கவர்ந்ததாக அவருடைய சிந்தனைகள் எதிர்காலத்தைப்பற்றி இருக்கும் எனவும் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றும் அஜய் ராவத் கூறியுள்ளார்.