அட ராமா.. ராமர் கோயிலுக்கு நிதி வசூலிப்பதில் மோதல் : 40 பேர் கைது!
டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டுவது தொடர்பாக குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை, கலவரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு நிதி திரட்டுவதற்காக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஊர்வலமாக சென்றுள்ளனர். ஊர்வலத்தின் போது மதம் சார்ந்த கோஷங்கள் எழுப்பிய படி சென்றுள்ளனர். இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கத்தி மற்றும் கட்டைகளைக் கொண்டு இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கண்ணீ்ர் புகைக்குண்டுகளை வீசி நிலைமையை கட்டுள்க்குள் கொண்டு வந்தனர். மோதல் நடைபெற்ற இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஜார்கண்டை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் மோதலின் போது உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஊர்வலத்திற்கு அந்த அமைப்பினர் அனுமதி ஏதும் பெறவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். ராமர் கோயிலுக்கு நிதி வசூலிக்க நடந்த ஊர்வலத்தின் போது இதே போன்று வன்முறை சம்பவங்கள் மத்திய பிரதேசத்தின் இந்தூர், உஜ்ஜைனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நாடு முழுவதும் நடந்துள்ளது.
சமீபத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.1.11 லட்சம் நிதி வழங்கிய காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங், அத்துடன் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி இருந்தார். அதில் இந்த வன்முறை சம்பவங்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதத்தில், இது போன்று ஆயுதங்களுடன் எந்த சமூகத்தினரும் ஊர்வலம் செல்வது சரியானது அல்ல. இது சமூகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும்.
இது போன்ற சம்பவங்களால் பிற மதத்தினர் ராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. அதனால் நாட்டின் பிரதமர் என்ற முறையில் இது போன்று ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்று நிதி வசூலிப்பதை தடுக்க மாநில அரசுகளுக்கு வழிகாட்ட வேண்டும் என திக்விஜய் சிங் வலியுறுத்தி இருந்தார்.