அம்மாடியோவ்… !! ரூ.6,900 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்… அதிரடி காட்டிய வருமானவரித்துறை
Recommended Video
டெல்லி: பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் 6,900 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரி துறை தகவல் தெரிவித்துள்ளது.
வரி ஏய்ப்பு மற்றும் கறுப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கைக்காக பினாமி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பினாமி ஒழிப்பு சட்டம் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, பினாமி பரிமாற்றங்கள், பினாமி நபர்கள், மற்றும் பினாமி மூலம் பலன் பெறுவோர் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்த முடியும். பினாமி தொடர்பான விஷயங்களில் தவறான தகவல்களை அளிப்போர் பினாமி சொத்து பரிமாற்றங்கள் தடை சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
அபராத தொகை
அவர்கள் பினாமி சொத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீத அபராத தொகையும் செலுத்த வேண்டும். இதனையடுத்து, 2016-17 நிதியாண்டில் தமிழகத்தில் 3,209 கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
சொத்துகள் கண்டுபிடிப்பு
இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, விசாரணையும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2017 -18ம் நிதியாண்டில் பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் 6,630 கோடி ரூபாய் பினாமி சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாக வருமானவரி புலனாய்வு பிரிவு தெரிவித்தது.
விளம்பரத்தில் தகவல்
இந்நிலையில், தனியார் நாளிதழ்களில் பொது விளம்பரம் ஒன்றை வருமான வரி துறை வெளியிட்டுள்ளது. அதில் பினாமி பரிமாற்றங்கள், பினாமிக்கள் மற்றும் பினாமிகளால் பலனடைவோர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்றும், அவர்களுக்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.
சிறை தண்டனை அளிக்கப்படும்
இதுதவிர்த்து பினாமி சொத்தின் சந்தை மதிப்பில் 25 சதவீதம் அபராதமும் செலுத்த வேண்டும் என்றும் தவறான தகவல்களை அளிப்போருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. அவர்கள் பினாமி சொத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீத அபராத தொகையும் செலுத்த நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.
உதவுமாறு வேண்டுகோள்
எனவே, வரி ஏய்ப்பினை ஒழிக்க நேர்மையான ஒவ்வொரு குடிமகனும் அரசுக்கு உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்பாக, சட்டவிரோத பணப் பரி வர்த்தனைகள் மூலம் வாங்கிக் குவிக்கப்பட்ட ரூ.3,900 கோடி மதிப்புடைய பினாமி சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.