காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் கை கலப்பு! அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு!
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் உத்தரப்பிரதேச நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. 18க்கும் மேற்பட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை கூட வெல்ல முடியாமல் பூஜ்யம் பெற்றுள்ளது.
காங்கிரஸின் கோட்டை என கூறப்படும் பல இடங்களில் அக்கட்சி மண்ணை கவ்வியது. காலங்காலமாக காங்கிரஸின் கையில் இருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல தொகுதிகள் இம்முறை கை நழுவி போனது.
கை நழுவிய கோட்டை
அமேதி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் படுதோல்வி அடைந்தார். இந்த படுதோல்வியை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியில் இருந்து விலக முடிவு செய்து பிடிவாதமாக உள்ளார் ராகுல்காந்தி.
உ.பி நிர்வாகிகள்
இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து மாநில வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்து கருத்துக்கேட்டு வருகிறது காங்கிரஸ் தலைமை. இன்று உத்தரப்பிரதேச மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு
இதில் கலந்து கொண்ட மேற்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
|
உட்கட்சி விவகாரம்
நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட இந்த தகராறை மூத்த நிர்வாகிகள் தடுத்து சமாதானம் செய்தனர். தகராறு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இது உட்கட்சி விவகாரம் என்றனர். கட்சி அலுவலகத்திற்குள்ளேயே நிர்வாகிகள் தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
|
குலாம் நபி ஆசாத் சரியில்லை
காங்கிரஸ் நிர்வாகியான கேகே ஷர்மா தெரிவிக்கையில் காலை 10 மணிக்கு கூட்டம் என கூறினார்கள். அப்போதிலிருந்து காத்திருக்கிறோம் ஆனால் மாலை 3 மணிக்கு தான் கூட்டம் நடத்தப்பட்டது. அதுவும் சரியான நபர்களை சந்திக்காமல் தலைவர்கள் முடிவு எடுக்கின்றனர். ஜோதிராதித்யா சிந்தியாவிடம் குலாம் நபி ஆசாத் குறித்து நிறைய பேச வேண்டும் என கூட்டத்தில் கூறியுள்ளேன் என்றார்.