அபிநந்தனின் மீசையை தேசிய அடையாளமாக்க காங். எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி வலியுறுத்தல்
டெல்லி: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி மீண்ட விமானப் படை வீரர் அபிநந்தனின் மீசையை தேசிய அடையாளமாக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி வலியுறுத்தியுள்ளார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆதிர் ரஞ்சன் செளத்ரி பேசியதாவது:
2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் என பேசினீர்கள். சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் திருடர்கள் என பேசினீர்கள்... சிறையில் அடைப்போம் என கூறினீர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அவையில்தான் இருக்கின்றனர்.
நாடு முழுவதும் வறட்சி தாண்டவமாடுகிறது... ஆனால் மத்திய அரசு இதைப்பற்றி கவலைப்படுவதாக இல்லை. மோடியை பாராட்டினால் போதும் என பாஜகவினர் எண்ணுகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. காங்கிரஸ் தொடங்கிய திட்டங்களின் பெயரை பாஜக மாற்றி தம்முடையதாக காட்டிக் கொள்கிறது.
தேசத்தின் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி தரப்பட்டது பாராட்டுக்குரியது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனின் மீசை நாடு முழுவதும் ஒரு அடையாளமாக மாறியிருக்கிறது. ஆகையால் அபிநதனின் மீசையை தேசிய அடையாளமாக்க வேண்டும்.
இவ்வாறு ஆதிர் ரஞ்சன் செளத்ரி பேசினார்.