ராணுவ ரகசியங்களை அசால்ட்டாக வாட்ஸ் அப்பில் பேசிய அர்னாப் கோஸ்வாமி.. விசாரணை நடத்த காங். வலியுறுத்தல்
டெல்லி: நாட்டின் ராணுவ ரகசியங்களை சர்வசாதாரணமாக வாட்ஸ் அப்பில் ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உரையாடியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்; அல்லது உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடருவது குறித்து ஆலோசிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் சிறையில் உள்ள பார்க் அமைப்பின் முன்னாள் சிஇஓ பார்த்தோ தாஸ் குப்தாவும், ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியும் வாட்ஸ் அப்பில் உரையாடிய விவரங்களும் சேர்க்கப்பட்டிருந்தன.
500 பக்கங்களைக் கொண்ட இந்த உரையாடல்கள் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததை டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தும் உத்தியாக அர்னாப் கருதியது, பாலகோட் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து உரையாடியது உள்ளிட்டவை நாடு முழுவதும் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாட்ஸ் உரையாடல்களை முன்வைத்து முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் மத்திய அரசை ட்வீட்டுகளால் கடுமையாக விமர்சித்திருந்தார். இதேபோல் காங்கிரஸ் தலைவர்களான ரந்தீப் சுர்ஜிவாலா, கபில் சிபல், சசி தரூர் ஆகியோரும் மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளனர்.
பாதுகாப்பு விவகாரங்கள்
ரந்தீப் சுர்ஜிவாலா: டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் வாட்ஸ் அப் உரையாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வாட்ஸ் அப் உரையாடல்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் எத்தகைய நிதி மோசடிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை இந்த வாட்ஸ் அப் உரையாடல்கள் அம்பலப்படுத்தி இருகின்றன. நீதிபதிகளை விலைக்கு வாங்குவது எப்படி என்பது குறித்தும் யார் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பதை பத்திரிகையாளர்கள் தீர்மானிப்பதையும் இந்த உரையாடல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இவை அனைத்துமே நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளன. இந்த பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இத்தகைய சம்பவங்களுக்கு யார் பொறுப்பு? யார் காரணம்? என்பது தொடர்பான கேள்விகளுக்கு பதில்கள் தேவை.
ஆபத்தான குற்றங்கள்- விசாரணை தேவை
கபில்சிபல்: தேச பாதுகாப்பு விவகாரங்களில் எத்தகைய சமரசங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதையே இது வெளிப்படுத்துகின்றன. அரசாங்கத்தின் ரகசியங்கள் எப்படி தனிநபர்களுக்கு கசியவிடப்படுகின்றன என்பதை இது காட்டுகிறது. இதுமிகவும் ஆபத்தான குற்றங்கள். எப்போது எதிரிநாட்டின் மீது தாக்குதல் நடத்தப் போகிறோம்? எங்கே தாக்குதல் நடத்தப்பட போகிறது என்பதெல்லாம் மிக முக்கியமான ரகசியங்கள். இது தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக ஊடகங்களுடன் இணைந்து கொண்டு அவர்களை பிரசாரத்துக்கான சக்தியாக அரசாங்கமே பயன்படுத்தி இருக்கிறது. ஒரு நல்ல அரசாங்கத்தின் அடிப்படை கொள்கைகளை இத்தகைய நடவடிக்கைகள் சீர்குலைத்துவிட்டன.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சசி தரூர்: நாட்டின் ராணுவ ரகசியங்கள் ஒரு டிவிசேனலின் வியாபாரத்துக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தேசத்தின் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததை டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்கான ஒரு சம்பவமாக அணுகியிருப்பது அவலமானது. அரசாங்கம் என்னதான் விசாரணை நடத்தினாலும் எந்த பயனும் இல்லை. ஆகையால் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடருவது குறித்து ஆராய வேண்டும்.
அதிர்ச்சியாக இருக்கின்றன
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவாண்: அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் உரையாடல்கள் மிகுந்த அதிர்ச்சியை தருகின்றன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தேச பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களை அர்னாப் கோஸ்வாமிக்கு கொடுத்தது யார் என்பது குறித்து தெரியவேண்டும்.. மத்திய அரசு இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழு இப்பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வேண்டும்.