டெல்லி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது நிகழ்ந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
டெல்லியில் நேற்று குடியரசு தின நாளில் பல லட்சக்கணகான டிராக்டர்களுடன் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். குடியரசு தின ஊர்வலம் முடிவடைந்த பின்னர் மாலை வரை குறிப்பிட்ட பாதைகளில் இந்த ஊர்வலம் நடத்தவும் டெல்லி போலீஸ் அனுமதித்திருந்தது.
ஆனால் திடீரென விவசாயிகள் போராட்டத்துக்குள் நுழைந்த ஒரு கும்பல் காலையிலேயே டிராக்டர் பேரணியை தொடங்கி டெல்லிக்குள் நுழைந்தது. உச்சகட்டமாக டெல்லி செங்கோட்டையில் சீக்கியர் கொடியை ஏற்றியது. இதனால் பல இடங்களில் மோதல்கள், தடியடிகள், கண்ணீர்புகை குண்டு வீச்சுகள் என சம்பவங்கள் நிகழ்ந்தன.
இதனைத் தொடர்ந்து டெல்லி போராட்டத்தில் இருந்து விலகுவதாக 2 விவசாய சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. இந்த நிலையில் டெல்லி சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியுள்ளதாவது: டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை நீர்த்து போகச் செய்ய மத்திய அரசு சதி செய்திருக்கிறது. டெல்லி செங்கோட்டைக்குள் அத்தனை பேர் எப்படி நுழைந்தார்கள்? அதனை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது டெல்லி போலீஸ்?
டெல்லி சம்பவங்களுக்கு காரணம் விவசாயிகளா? மத்திய அரசா? டெல்லி சம்பவங்களை சரியாக கையாளாகமல் போனது மத்திய அரசா? விவசாயிகளா? டெல்லி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கவே தீப் சித்து களமிறக்கப்பட்டார். இந்த சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமித்ஷா உடனே ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.