வெளிநாட்டுக்கு சென்றார் ராகுல் காந்தி- ஒருவாரம் 'முகாம்'
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவார கால பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். நவம்பர் முதல் வாரம் நாடு திரும்பும் ராகுல் காந்தி, காங்கிரஸின் பொருளாதார மந்தநிலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்கிறார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. தொடக்கத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த ராஜினாமாவை ஏற்க மறுத்தது.
ஆனால் ராகுல் காந்தி பிடிவாதம் காட்டியதால் ராஜினாமா ஏற்கப்பட்டது. இதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராகுல் தமது லோக்சபா தொகுதியான வயநாட்டில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்களில் பிரசாரம் செய்தார். இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறிப்பிடத்தகுந்த வகையில் தொகுதிகளைப் பெற்றன.
இந்நிலையில் திங்கள்கிழமையன்று ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஒருவார காலம் ராகுல் காந்தி வெளிநாட்டில் தங்கி இருப்பார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க 45 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ரெடியாம்.. பாஜக எம்பி சஞ்சய் காகடே
நவம்பர் முதல் வாரத்தில் நாடு திரும்பும் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொருளாதார மந்தநிலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்க உள்ளார். நவம்பர் 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நாடு முழுவதும் 35 செய்தியாளர் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் நாட்டின் பொருளாதார மந்த நிலையை சீரமைக்க வலியுறுத்தி நவம்பர் 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நாடு தழுவிய போராட்டங்களையும் காங்கிரஸ் கட்சி நடத்த திட்டமிட்டுள்ளது.