பாஜகவை எதிர்க்க சரத்பவார், மமதா, ஜெகன்...மாஜி காங். தலைவர்களும் தேவை- காங். சீனியர்கள் வலியுறுத்தல்
டெல்லி: பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடி அரசை எதிர்க்க காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி நடத்தி வரும் சரத்பவார், மமதா பானர்ஜி, ஜெகன் மோகன் உள்ளிட்டோரையும் ஒருங்கிணைத்து காங்கிரஸ் மேலிடம் செயல்பட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் மேல்மட்டம் முதல் கீழ்நிலை வரை மறுசீரமைப்பு அவசியம் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. அண்மையில் குலாம்நபி ஆசாத் உட்பட 23 தலைவர்கள் இது தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் பெரும் பிரச்சனையாக வெடித்தது.
காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா நீடிப்பார்.. இன்னும் 6 மாதத்தில் புதிய தலைவர்.. பரபரப்பு முடிவு!
செயற்குழுவில் கொந்தளிப்பு
இது தொடர்பாக காங்கிரஸ் செயற்குழுவில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, அதிருப்தி தலைவர்கள், பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதனால் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், கபில் சிபல் ஆகியோர் கொந்தளித்தனர். பின்னர் சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் மூத்த தலைவர்களை சமாதானப்படுத்தினர்.
சரத்பவார், மமதா, ஜெகன்
இருந்தபோதும், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம், மறுசீரமைப்பு குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முக்கியமாக, காங்கிரஸில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர்களான சரத்பவார், மமதா பானர்ஜி, ஜெகன் மோகன் ஆகியோருடன் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்; அப்போதுதான் பாஜக, ஆர்.எஸ்.எஸ், மோடி அரசு ஆகியவற்றை வலிமையாக எதிர்க்க முடியும் என்கிற கருத்தை காங்கிரஸ் மேலிடத்திடம் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நடந்த வரலாறுதான்
1970களின் தொடக்கத்தில் இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என காங்கிரஸ் கட்சி 2 ஆக பிளவுபட்டது. 1980களில் இந்திரா தலைமையிலான காங்கிரஸ்தான் வலிமையானதாக விஸ்வரூபம் எடுத்தது. அப்போது காங்கிரஸில் இருந்து விலகிய பல தலைவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பினர். ராஜீவ் காந்தி காலத்திலும் 1990களில் சீதாராம் கேசரி காலத்திலும் இதேபோல காங்கிரஸை விட்டு வெளியேறிய தலைவர்கள் மீண்டும் கட்சிக்கே திரும்பினர்.
தாய் கட்சிக்கு திரும்பியவர்கள்
முதுபெரும் காங்கிரஸ் தலைவர்களான ஒய்பி சவாண், பகுகுணா, சரத்பவார், ஏ.ஏக். அந்தோணி, அமரீந்தர்சிங், பிரணாப் முகர்ஜி, அர்ஜூன்சிங், என்டி திவாரி, மாதவராவ் சிந்தியா என பலரும் இதேபோல் காங்கிரஸ் மேலிடத்துடன் முறுக்கிக் கொண்டு வெளியேபோய் மீண்டும் தாய்க்கட்சிக்கு திரும்பியவர்கள். சோனியா காந்தி காலத்திலும் கூட ப. சிதம்பரம். அம்பிகா சோனி, தாரிக் அன்வர் ஆகியோர் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பினர். தற்போதைய நிலையில் சரத்பவார் தலைமையிலான என்சிபி கட்சியுடன் மட்டும்தான் காங்கிரஸுக்கு நல்லுறவு இருக்கிறது.
நிச்சயம் வலிமையான அணி
மகாராஷ்டிரா மாநிலத்தில் என்சிபி-காங்கிரஸ்- சிவசேனா கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவற்றை பரம விரோதியாகவே காங்கிரஸ் பார்க்கிறது. இந்த அணுகுமுறையால் பாஜகதான் எளிதாக ஆதாயம் அடைகிறது என்பதையும் காங்கிரஸ் மேலிடத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சரத்பவார், மமதா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் கட்சிக்கு திரும்புவது என்பது சாத்தியம் அல்லதான் என்ற போதும் இவர்களை ஒருங்கிணைத்து வலிமையான அணியை காங்கிரஸ் மேலிடம் நினைத்தால் உருவாக்க முடியும். காங்கிரஸ் மேலிடம் இந்த அணி அமைப்பதில் உறுதியாக இருந்தால் மாநில கட்சிகள் இயல்பாகவே இந்த அணியில் இணையும். இது பாஜகவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதுதான் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கருத்து.