என்.சி.பி.யுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே இறுதி முடிவு- மல்லிகார்ஜுன கார்கே
டெல்லி: தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டதால் சிவசேனைக்கு ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். சிவசேனா முதல்வர் பதவியில் திட்டவட்டமாக இருந்ததால் ஆதரவு தர காங்கிரஸ் முன்வரவில்லை.
இதனால் சிவசேனாவும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பறிகொடுத்தது. தற்போது என்சிபியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்கிறார். இதற்கான கெடு இன்று இரவு 8.30 மணியுடன் முடிவடைகிறது.
அதேநேரத்தில் ஆட்சி அமைப்பது குறித்து முடிவெடுக்கும் இடத்தில் காங்கிரஸ் இருப்பதால் ஒருவித சோர்வு மனநிலையில் என்சிபி இருந்து வருகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் என்சிபிக்குத்தான் முதல்வர் பதவி என நிபந்தனை விதிக்கிறது.
இதனை சிவசேனா ஏற்குமா என்பது தெரியவில்லை. இந்நிலையில் என்சிபி தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே, அகமது படேல் ஆகிய மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மும்பையில் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கூட்டணி அமைத்திருக்கின்றன. ஆகையால் எந்த ஒரு முடிவையும் இரு கட்சிகளும் இணைந்தே எடுக்கும்.
தேசியவாத காங்கிரஸுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம் என்றார்.