காங். பொதுச் செயலாளர்கள், மாநில மேலிடப் பொறுப்பாளர்கள் அதிரடி மாற்றம்..ராகுல் தளபதிகள் கை ஓங்கியது!
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர்கள், மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்களில் ராகுல் காந்தி ஆதரவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக காங்கிரஸில் பல்வேறு மாற்றங்களை செய்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்டமைப்பில் மாற்றங்கள் தேவை என 23 மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். தற்போது அவர்களுக்கு பதில் தரும் வகையில் இந்த மாற்றங்களை செய்திருக்கிறார் சோனியா காந்தி.
காங். செயற்குழு உறுப்பினர்கள்... பிரியங்காவுக்கு அடுத்ததாக 16-வது இடத்தில் ப.சிதம்பரம்
காங். செயற்குழு
காங்கிரஸ் செயற்குழு முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிய பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். புதிய தலைவரை தேர்வு செய்யும் மத்திய தேர்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. சோனியாவுக்கு ஆலோசனை வழங்கும் குழு உருவாக்கப்பட்டிருக்கிறது.
காங். செயற்குழு மாற்றியமைப்பு- தமிழக பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ், உ.பி.க்கு பிரியங்கா நியமனம்
சோனியா ஆலோசனை குழு
சோனியாவுக்கான ஆலோசனைக் குழுவில் ஏ.கே. அந்தோணி, அகமது பட்டேல், அம்பிகா சோனி, கேசி வேணுகோபால், முகுல் வாஸ்னிக், ரந்தீப் சிங் சுர்ஜிவாலா இடம்பெற்றுள்ளனர். அடுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெறும் வரை இந்த குழு செயல்படும். இது நிரந்தரமான அமைப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் முகுல் வாஸ்னி, கட்சித் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய 23 பேரில் ஒருவர்.
செயற்குழுவில் இளம் முகங்கள்
பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர்கள் பதவிகளில் இருந்து மூத்த தலைவர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான இளம் தலைவர்கள் பலர் இந்த பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். காங்கிரஸ் செயற்குழுவிலும் இளம் முகங்கள் நிரந்தர அழைப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
காங். பொதுச் செயலாளர் பதவியில் இருந்து 'கலகக் குரல்' குலாம்நபி ஆசாத் விடுவிப்பு
தேர்தல் குழுவில் ஜோதிமணி
புதிய தலைவரை தேர்வு செய்யக் கூடிய குழுவின் தலைவரான மதுசூதன் மிஸ்திரி ராகுல் காந்திக்கு நெருக்கமானவர். இதன் உறுப்பினர்களான ராஜேஷ் மிஸ்ரா, கிருஷ்ண பைரே கவுடா, தமிழகத்தின் ஜோதிமணி மற்றும் அர்விந்தர்சிங் லவ்லி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பைரே கவுடாவும் ஜோதிமணியும் ராகுலுக்கு நெருக்கமானவர்கள்.
குலாம் நபி, அம்பிகா சோனி, கார்கே
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, மல்லிகார்ஜுன கார்கே, லூசினோ ஃபெலேரோ ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஹரியானா மேலிடப் பொறுப்பாளராக குலாம் நபி ஆசாத் இருந்து வந்தார். ஜம்மு காஷ்மீர் மேலிடப் பொறுப்பாளராக அம்பிகா சோனி, மகாராஷ்டிரா மேலிடப் பொறுப்பாளராக மல்லிகார்ஜூன கார்கே, மிசோராம், திரிபுரா, நாகாலாந்து, அருணாச்சல், மேகாலயா பொறுப்பாளராக லூசினோ பெலிரோ இருந்தார். 92 வயதாகும் மோதிலால் வோரா, நிர்வாக பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார்.
காங். புதிய நியமனங்களில் தமிழகத்தின் ப. சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், ஜோதிமணிக்கு இடம்
செயற்குழுவில் ப. சிதம்பரம்
இவர்கள் அல்லாமல் உத்தரகாண்ட் பொறுப்பாளர் அனுராக் நாராயண் சிங், பஞ்சாப் பொறுப்பாளர் ஆஷா குமார், மேற்கு வங்க பொறுப்பாளர் கவுரவ் கோகாய், தெலுங்கானா பொறுப்பாளர் குந்தியா ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் லோக்சபா துணைத் தலைவராக கவுரவ் கோகாய் அண்மையில் நியமிக்கப்பட்டார். இருந்த போதும் குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி ஆகியோரை காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களாகவே நீடிக்கச் செய்திருக்கிறார் சோனியா. காங். செயற்குழுவின் நிரந்தர அழைப்பாளராக இருந்த ப. சிதம்பரம் இம்முறை செயற்குழுவில் முழுநேர உறுப்பினராக்கப்பட்டுள்ளார். செயற்குழுவில் இருந்து சத்தீஸ்கர் அமைச்சர் தம்ராத்வாஜ் ஷாஹூ, மோதிலால் வோரா, லூசினோ பெலிரோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
பொதுச்செயலர் பதவியில் ராகுல் டீம்
லோக்சபா காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸ் செயற்குழுவில் நிரந்தர உறுப்பினராக்கப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் திக்விஜய்சிங், ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித் , பிரமோத் திவாரி ஆகியோரும் உள்ளனர். ஏற்கனவே பொதுச்செயலாளர்களாக இருந்த முகுல் வாஸ்னி, ஹரீஷ் ராவத், உம்மன் சாண்டி, அஜய் மாகென், பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் தொடர்ந்து அதே பதவியில் நீடிக்கின்றனர். புதிய பொதுச்செயலாளர்களான ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, ஜிதேந்திரசிங் இருவரும் ராகுலுக்கு மிக மிக நெருக்கமானவர்கள். ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, கர்நாடகா மேலிடப் பொறுப்பாளராகவும் ஜிதேந்திர சிங் அஸ்ஸாம் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தாரிக் அன்வார், கேரளா மற்றும் லட்சத்தீவுகளுக்கான மேலிடப் பொறுப்பாளர்.
Recommended Video
தெலுங்கானா- மாணிக்கம் தாகூர்
நிர்வாகப் பொதுச்செயலாளர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பவன்குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் தலைவர்களில் ஜிதின் பிரசாதா, மேற்கு வங்க மாநில மேலிடப் பொறுப்பாளராகி உள்ளார். இன்னொரு ராகுல் ஆதரவாளரான தினேஷ் குண்டுராவ், தமிழகம்-புதுவை- கோவை மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர். ராகுல் அணியின் முக்கியமானவரான தமிழகத்தின் மாணிக்கம் தாகூர்- தெலுங்கானா மேலிடப் பொறுப்பாளராகி உள்ளார். மகாராஷ்டிரா பொறுப்பாளராக இருந்த கார்கே நீக்கப்பட்ட நிலையில் கர்நாடகாவின் ஹெச்.கே. பாட்டீல் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். இமாச்சல பிரதேசத்தின் மேலிடப் பொறுப்பாளராக ராஜீவ் சுக்லாவும் உத்தரகாண்ட் பொறுப்பாளராக தேவேந்திர யாதவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். பெரும்பாலான புதிய நியமனங்களில் ராகுல் காந்தி ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.