காங். செயற்குழு மாற்றியமைப்பு- தமிழக பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ், உ.பி.க்கு பிரியங்கா நியமனம்
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகம், புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். உ.பி. மாநில பொறுப்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்திக்கு எதிராக அக்கட்சியில் அண்மையில் மூத்த தலைவர்கள் அதிருப்தி குரலை வெளிப்படுத்தினர். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இது எதிரொலித்தது.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் உரிய நேரத்தில் மறுசீரமைப்பு செய்யப்படும் என இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கூறியிருந்தார். இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுவை மாற்றி அமைத்துள்ளா சோனியா காந்தி.
அருணாச்சல பிரதேசம்: 5 இந்தியர்களை நாளை ஒப்படைக்கிறது சீனா- மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர்
சோனியா, மன்மோகன்சிங், ராகுல்காந்தி, ஏ.கே.அந்தோணி, அகமது படேல், அம்பிகா சோனி, குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஹரீஷ் ராவத், கேசி வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே, முகுல் வாஸ்னிக், உம்மன் சாண்டி, அஜய் மாகென், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம். ஜிதேந்திர சிங், தாரிக் அன்வார், ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, கல்ங்கம், ரகுவீர் சிங் மீனா, தருண் கோகாய் உள்ளிட்ட 16 பேர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு, நிரந்தர அழைப்பாளர்கள்
திக்விஜய்சிங், மீரா குமார், ஆதிர் ரஞ்சன் செளத்ரி, ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித், அவினாஷ் பாண்டே, முனியப்பா, பிரமோத் திவாரி, தாரிக் ஹமீத் கர்ரா, பவன்குமார் பன்சால், ரஜனி பாட்டீல், பி.எல். புனியா, ஆர்.பி.என்.சிங், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் உள்ளிட்ட 22 பேர் செயற்குழுவின் நிரந்தர உறுப்பினர்களாகவும் தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட 10 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்
காங்கிரஸ் கட்சியில் 9 புதிய பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காங். பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம், புதுவை, கோவா மாநிலங்களுக்கு தினேஷ் குண்டுராவ் மேலிடப் பொறுப்பாளராக்கப்பட்டுள்ளார்.
ஒடிஷா பொறுப்பாளர் செல்லக்குமார்
தமிழகத்தின் செல்லக்குமார் எம்.பி, ஒடிஷா மாநில மேலிடப் பொறுப்பாளராகவும் தெலுங்கானா மாநில பொறுப்பாளராக மாணிக்கம் தாகூரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதுசூதன் மிஸ்திரி தலைமையிலான இக்குழுவில் கரூர் லோக்சபா எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட 4 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.