குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை(யை)விட்டார்.. திடீரென விழித்த காங். - ம.பி.க்கு தலைவர்கள் படையெடுப்பு!
டெல்லி/ போபால்: மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் 22 எம்.எல்.ஏக்களை தக்க வைக்க முடியாத காங்கிரஸ் தற்போது திடீரென பிரச்சனைக்கு தீர்வு காண தலைவர்களை போபாலுக்கும் பெங்களூருக்கும் அனுப்பி வைத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத்தின் பிடிவாதத்தால்தான் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியை விட்டே வெளியேறி விட்டார். முதல்வர் பதவியை எதிர்பார்த்தவர் சிந்தியா. அதை மேலிட செல்வாக்கால் தட்டிப் பறித்தார் கமல்நாத்.
கமல்நாத் பிடிவாதம்
அடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கும் என நினைத்தார். அதையும் தந்துவிடக் கூடாது என்பதில் படுபிடிவாதம் காட்டினார் கமல்நாத். இதனால் மிகவும் கடுப்பான சிந்தியா, ராஜ்யசபா சீட்டாவது கிடைக்கும் என கனவு கண்டார். அதற்கும் கமல்நாத் டெல்லியில் சித்து வேலைகள் காட்டி வேட்டு வைத்தார்.
பாஜகவில் ஐக்கியம்
இதனால் வெறுத்துப் போய் காங்கிரஸில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டார். முன்னதாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் சிந்தியா சந்தித்து பேசினார். இதனால் அவர் பாஜகவில் இணைவது உறுதியாகிவிட்டது. சிந்தியா காங்கிரஸில் இருந்து வெளியேறிய உடனே அவருக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
எம்.எல்.ஏக்கள் ஜெய்ப்பூருக்கு மாற்றம்
இத்தனை களேபரங்கள் நடந்தும் காங்கிரஸ் மேலிடம் எதுவும் செய்யாமலேயே இருந்தது. சிந்தியாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்த பின்னரே ஆஹா, ஆட்சி பறிபோகப் போகிறதோ என்கிற பதற்றத்தில் அதாவது திடீரென முழித்துக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் மூத்த தலைவர்கள் கேசி வேணுகோபால், ஹரீஷ் ராவத் ஆகியோருடன் நேற்று சோனியா ஆலோசனை நடத்தினார். பின், போபாலில் இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதற்காக அக்கட்சி ஆளும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு எம்.எல்.ஏக்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
போபாலில் மேலிட தலைவர்கள்
மேலும் சஞ்சய்சிங் வர்மா, கோவிந்த்சிங் ஆகிய தலைவர்களை பெங்களூருக்கு அனுப்பி வைத்துள்ளது காங். மேலிடம். பெங்களூருவில் முகாமிட்டுள்ள 19 அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்தித்து அவர்களில் சிலரையாவது ராஜினாமாவை வாபஸ் பெற வைத்துவிடலாம் என்பது இவர்களுக்கான அஜெண்டா. மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக், மூத்த தலைவர் ஹரீஷ் ராவத், மபி மேலிட பொறுப்பாளர் தீபக் பபாரியா ஆகியோர் போபாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், ஜெய்ப்பூருக்கு செல்வதற்கு முன்னதாக அவர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு சில வாக்குறுதிகளும் தரப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
குறட்டை விட்டா கோட்டை(யை)விட்டுத்தான் ஆகனும்!