பீகார் தேர்தல் தோல்வியால் காங்கிரஸில் கலகம்... இன்று சிறப்பு குழு கூடுகிறது!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு வெடித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு ஆலோசனை வழங்கும் சிறப்பு குழுவின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் போட்டியிட்டு 19-ல் தான் வென்றது. காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களைப் பெற்றிருந்தால் ஆர்ஜேடியால் பீகாரில் ஆட்சி அமைக்க முடிந்திருக்கும்.
காங்கிரஸ் கட்சியின் வலிமையை மீறி 70 இடங்கள் ஒதுக்கப்பட்டதால்தான் ஆர்ஜேடியால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்பது இடதுசாரிகளின் தொடர்ச்சியான விமர்சனம். அதேநேரத்தில் பீகார் தோல்வியானது காங்கிரஸ் கட்சிக்குள்ளும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸின் மூத்த தலைவர் கபில்சிபல், லோக்சபா எம்.பி. கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் தேர்தல் தோல்வி தொடர்பாக சுய பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போன்றவர்கள், கட்சி பிரச்சனைகளை ஏன் பொதுவெளியில் பேசுகிறீர்கள் என கோபப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் சோனியா காந்திக்கு ஆலோசனை வழங்கும் காங்கிரஸின் உயர்நிலை சிறப்பு குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பீகாரில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. 11 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இது குறித்தும் இன்று விவாதிக்கப்பட உள்ளது.