நாடு திரும்புகிறார் ராகுல்.. புதிய தலைவரை தேர்வு செய்ய கூடுகிறது காங். காரிய கமிட்டி?
டெல்லி: வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்புகிறார் ராகுல் காந்தி. அடுத்த வாரம் கூடும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
இந்தியான் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு யார் தலைவர் என்பது இன்னமும் தெரியவில்லை. இது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவுதான். இதனால்தான் கர்நாடகாவில் பாஜக, கட்சி எம்.எல்.ஏக்களை கடத்திய போதும் தடுக்க முடியாமல் ஆட்சியை பறிகொடுத்தது.
தற்போது மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு குறிவைத்திருக்கிறது பாஜக. ஆனால் முதல்வர் கமல்நாத் தொடக்கம் முதலே பாஜகவின் வியூகங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் வெளிநாட்டு பயணங்களை முடித்துவிட்டு ராகுல் காந்தி அடுத்த சில நாட்களில் நாடு திரும்புகிறார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் மீண்டும் கூடுகிறது.
அக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார். நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி தலைவராக அறிவிக்கப்படுவாரா? அல்லது நேரு குடும்பத்துக்கு வெளியே ஒருவர் தலைவராக அறிவிக்கப்படுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.