ஒரு வருஷமாச்சு.. காங். தலைவர் தேர்தலே நடத்தலை.. இடைக்கால தலைவராகவே நீடிக்கப் போகும் சோனியா
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் தலைவர் தேர்தல் நடைபெறாத நிலையில் அக்கட்சியின் இடைக்கால தலைவராகவே சோனியா காந்தியே நீடிப்பார் என்கிற அறிவிப்பு வெளியாக உள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 52 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தோல்வியைத் தழுவினார்.
கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் மட்டும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்த போதும் ராகுல் ஏற்கவில்லை.
இதனால் வேறுவழியே இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியை, காங்கிரஸ் காரிய கமிட்டி அறிவித்தது. கடந்த ஓரான்டு காலமாக சோனியா காந்தி, இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக பல்வேறு மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் கட்சியில் தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்து ஓராண்டாகிவிட்டது. இன்னமும் கட்சிக்கான தலைவர் தேர்வு செய்யப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து தற்போதைய இடைக்கால தலைவரான சோனியா காந்தியே, தொடர்ந்து இந்த பதவியில் நீடிப்பார் என்கிற அறிவிப்பை காங்கிரஸ் காரிய கமிட்டி நிர்வாகிகள் விரைவில் வெளியிடக் கூடும் என கூறப்படுகிறது.