திடீர் திருப்பம்.. காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி? டெல்லி அரசியலில் பரபரப்பு
டெல்லி: திடீர் திருப்பமாக, டெல்லி, மற்றும் ஹரியானாவில், காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணியில், காங்கிரஸ் கட்சியை சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் வட மாநிலங்கள் பலவற்றிலும் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது.
டெல்லி, மற்றும் ஹரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மி பலமாக உள்ளது. கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் அதை அறிந்து கொள்ள முடிந்தது.
மைக்கேல் "மாமா" உண்மையை சொல்லிட்டார்.. அகமது படேல் எந்த குடும்பத்துக்கு நெருக்கமானவர்?.. மோடி பொளேர்
பேச்சுவார்த்தைகள்
அதிலும் குறிப்பாக டெல்லியில், ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, டெல்லி மற்றும் ஹரியானாவில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகளை திரைமறைவில் பேசி வந்தது.
டெல்லி, ஹரியானா
டெல்லிக்கு மட்டும் கூட்டணி போதும் என்று காங்கிரஸ் விரும்பியது. ஆனால் ஹரியானாவுக்கும் சேர்த்து கூட்டணி என்றால் ஓகே என ஆம் ஆத்மி திட்டவட்டமாக கூறிவிட்டது. எனவே இறங்கி வந்துள்ளது காங்கிரஸ். டெல்லி மற்றும் அண்டை மாநிலமான ஹரியானாவில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முடிவு செய்து பச்சைக் கொடி காட்டிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எந்த மாநிலங்களில் யார் ஆட்சி
டெல்லியில் 7 லோக்சபா தொகுதிகளும், ஹரியானாவில் 10 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. அதேநேரம், மற்றொரு அண்டை மாநிலமான பஞ்சாப்பில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது பற்றி இதுவரை பேசவில்லையாம். பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியும், ஹரியானாவில் பாஜக ஆட்சியும் நடைபெற்று வருகிறது.
டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து
இதனிடையே, டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை திருத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஆம் ஆத்மியின் முக்கிய நிபந்தனையாக இந்த கோரிக்கை இருப்பதால், அதற்கு காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளதாம். ஏற்கனவே, புதுச்சேரியை தனி மாநிலமாக அங்கீகரிக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது.