டெல்லியில் ஈவிஎம் இயந்திரங்கள் கோளாறு.. ஆம் ஆத்மி, காங். குற்றச்சாட்டு
டெல்லி: டெல்லியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் குற்றஞ்சாட்டி வருகின்றன.
டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று 6-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
கடும் வெயில் காரணமாக பல இடங்களில் வாக்காளர்கள் காலையிலேயே வாக்களிக்க குவிந்தனர். அதுபோல் பிரபலங்களும் குவிந்து வருகின்றனர். டெல்லியை பொருத்தமட்டில் டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா மற்றும் அடிஷி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.
இந்த நிலையில் கல்காஜி, சாக்கெட், பாதர்பூர் உள்ளிட்ட டெல்லியின் பல்வேறு இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அது போல் சாந்தினி சவுக்கில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளிலும் ஈவிஎம் இயந்திரங்கள் சரிவர பணியாற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.