கோட்சே விவகாரம்.. தர்ம சங்கடத்தில் காங்கிரஸ்...சிவசேனாவை வைத்து பாயும் அம்புகள்
டெல்லி: சிவசேனா கூடதான் 2010ல் கோட்சேவை தேசபக்தர் என்று சொன்னது.. இப்ப அந்த கட்சி கூடவே மகாராஷ்டிராவில் நீங்க கூட்டணி வைச்சிருக்கீங்க இது மட்டும் சரியா என்று காங்கிரஸ் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர், தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என்று புகழ்ந்து பேசினார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகளை முடக்கி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரக்யாவுக்கு தடை
மேலும் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் உள்பட 50 பேர் பிரக்யா சிங்கை நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கவேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பிரக்யா பயங்கரவாதி
இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரக்யா சிங் தாகூரை, பயங்கரவாதி என்றும் அதனால் தான் பயங்கரவாதியான கேட்சேவை தேசபக்தர் என்கிறார் என்றும், இந்திய நாடாளுமன்றத்தின் கருப்பு தினம் என்றும் விமர்சித்தார்.
கோட்சே தேச பக்தர்
பயங்கரவாதி பிரக்யாசிங் தாகூர் என்று டுவிட்டரில் ஹேஷ்டேக்குகள் வைரலாகி வரும் நிலையில் அதில் சிலர் தங்கள் டுவிட் பக்கத்தில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னா கடந்த 2010ம் ஆண்டு கோட்சேவை தேசபக்தர் என்று விமர்சித்து இருந்தது. அந்த கட்சியுடன் தான் நீங்கள் இப்போது கூட்டணி வைத்துள்ளீர்கள் என விமர்சித்துளளனர்.
சிவசேனா குறித்து
கோட்சேவை தேசபக்தர் என்ற சொன்ன பிரக்யாவுக்கு பயங்கரவாதி பட்டம் கொடுக்கும் காங்கிரஸ், சிவனோவுக்கு மட்டும் முதல்வர் பதவி அளிக்கிறேதே என்று விமர்சித்து வருகிறார்கள். இதனால் தர்மசங்கடமான நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. சிவசேனா குறித்த விமர்சனங்களை தவிர்த்து வருகிறது.