ஹலோ.. சவாலை சந்திக்க நாங்க ரெடி… ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பாஜகவுக்கு பதில் சொன்ன காங்கிரஸ்
டெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் பாஜகவின் சவாலை சந்திப்பதாகவும் வரும் 21ம் தேதி விவாதத்துக்கு தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்றளவும் புகைந்து கொண்டிருக்கும் விவகாரம் ரபேல் போர் விமான ஒப்பந்தமாகும். பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் இந்த விவகாரத்தில் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றன.
பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து ரபேல் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி வருகிறார்.
பாதுகாப்புத் துறையில் எந்தவொரு அனுபவமும் இல்லாத அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 30,000 கோடி இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றமும் ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிரான மனுக்களை விசாரிக்காமல் நிராகரித்தது.
அனில் அம்பானி நிறுவனத்திடம் அதிக விலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டிற்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டதற்கு எந்தவொரு வணிகம் சார் நோக்கத்திற்கான சான்றுகள் ஏதுமில்லை என்றும் அறிவித்தது.
அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் ரபேல் ஜெட் ஒப்பந்தம் குறித்தான விவாதத்திலிருந்து ஒவ்வொரு காங்கிரஸ் ஓடிவிடுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் புகார் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் இந்த சவாலை ஏற்கிறது என்று கூறியிருந்தார்.
அதன்படி ஜனவரி 2ம் தேதியன்று ரபேல் ஒப்பந்தம் குறித்தான விவாதம் நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நேரம் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஜெட்லியின் சவாலை ஏற்று நாளை விவாதத்திற்கு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, நாளை கூடும் நாடாளுமன்றத்தில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவாதம் அனல் பறக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ராஜ்யசபாவில் முத்தலாக் தொடர்பான மசோதாவும் வர இருப்பதால் நாளை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.