2 நாட்கள் இழுபறிக்கு பிறகு நிறைவடைந்த ம.பி. வாக்கு எண்ணிக்கை.. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்.
Recommended Video
டெல்லி: மத்திய பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து முடிந்துள்ளது. காங்கிரஸ் 114 தொகுதிகளை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 109 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஆரம்பம் முதலே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நடுவே தீவிரமான போட்டி நிலவி வந்தது. சில நேரங்களில் பாஜக, காங்கிரசை விட அதிக தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகவும் சில நேரங்களில் பாஜகவைவிட, காங்கிரஸ் முன்னிலை வகிப்பதாகவும் டிரெண்ட் மாறி மாறி மாறி கொண்டு இருந்தது.
நள்ளிரவு டிராமா
ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தனிப்பெரும் நன்மையை பிடிக்க முடியாவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக உருவாகும் சூழ்நிலை காணப்பட்டது. இருந்தாலும் கூட இந்த டிரெண்ட்டை நம்ப முடியாது என்பதால், யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற பரபரப்பு நீடித்துக்கொண்டு இருந்தது. ஆனால் நள்ளிரவு வரை அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாத நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது.
ஒரு தொகுதி
இதனிடையே இன்று காலையிலும் கூட வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்தது. காலை 8 மணிக்கு, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புபடி, ஒரு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதாக கூறப்பட்டது. காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.
பிற கட்சிகள்
காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 109 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி ஒரு தொகுதியில், சுயேச்சைகள் நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
தனிப்பெரும் கட்சி
எனவே, ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமைகோரும். பெரும்பான்மையை நிரூபிக்க 116 இடங்கள் தேவை என்பதால் எஞ்சிய இரு உறுப்பினர்களின் ஆதரவை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து பெறுவதற்கான முயற்சியை காங்கிரஸ் தலைமை மேற்கொள்ளக் கூடும். அத்துடன் சுயேச்சைகள் ஆதரவையும் கேட்கக் கூடும். பாஜகவும் ஆட்சியமைக்க உரிமை கோரும் என தெரிகிறது. எனவே மத்திய பிரதேச தேர்தல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.