திடீர் திருப்பம்.. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி?
Recommended Video
டெல்லி: கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில், இருந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு, வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகுல் காந்தி. கடந்த முறையை இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜகவின் ஸ்மிருதி இரானி, மீண்டும் இம்முறையும் அமேதி தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி தனது தொகுதியை மாற்றிக் கொண்டு வயநாட்டிலிருந்து, போட்டியிட வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுக் குழு விரும்புவதாக கூறப்படுகிறது.
வயநாட்டில், ராகுல் காந்தி போட்டியிடுவதன் மூலம், கேரளாவில் காங்கிரஸ் தனது செல்வாக்கை உயர்த்த முடியும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும், கேரளாவின் முன்னாள் முதல்வருமான உம்மன்சாண்டி கருதுகிறார். இதையடுத்து, ராகுல் காந்தியிடம் வயநாடு தொகுதியில் போட்டியிட உம்மன் சாண்டி வற்புறுத்தியுள்ளார். ராகுல் காந்தியின் தொகுதி தொடர்பான அறிவிப்பு இன்று இரவுக்குள் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா, மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2008ம் ஆண்டு உருவான வயநாடு தொகுதி, காங்கிரசின் கோட்டையாக இருந்து வருகிறது. 2014ம் ஆண்டு காங்கிரசின் ஷானவாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மோகேரியை விட 20 ஆயிரத்து 870 வாக்குகள் அதிகம் பெற்று இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். இருப்பினும் கடந்த வருடம் ஷானவாஸ் மரணமடைந்தார். முன்னதாக 2009ம் ஆண்டு தேர்தலில் இ.கம்யூ வேட்பாளரை ஷானவாஸ் இதே தொகுதியில் 1,53,439 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.