ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம்.. காங். அதிரடி!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு திடீரென நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லே ஆகிய யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழக் கூடாது என்பதால் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
காஷ்மீரில் அசாதாரணம்
வெளி உலக தகவல் தொடர்பு இல்லை ஏதும் இல்லாமல் இருக்கிறது ஜம்மு காஷ்மீர். இந்த அசாதாரண நிலையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
நியாயப்படுத்தும் கூட்டங்கள்
மேலும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிராக ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் நாடு முழுவதும் ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை நியாயப்படுத்தும் பொதுக் கூட்டங்களையும் பாஜக நடத்தி வருகிறது.
காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல்
இந்த சூழ்நிலையில் வரும் 24-ந் தேதி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு பிந்தைய முதலாவது தேர்தல் இது. ஆனால் இத்தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காங். புறக்கணிப்பு
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஜிஏ மிர், காஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். அதை செய்யாத நிலையில் தேர்தலை நடத்தினால் காங்கிரஸ் புறக்கணிக்கும் என்றார்.
பாஜக போட்டி
தற்போதைய நிலையில் பாஜக மட்டும்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறது. தேசிய மாநாட்டுக் கட்சி, பிடிபி, இடதுசாரிகள் ஆகியவற்றின் தலைவர்கள் சிறைகளில் இருப்பதால் அந்த கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுமா? என்பது சந்தேகமே.