தொடர்ந்து ராஜீவ் காந்தியை விமர்சிக்கும் மோடி.. கோபத்தில் ராகுல் காந்தி.. வழக்கு தொடுக்க முடிவு!
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி மீண்டும் மோசமாக விமர்சனம் செய்து கடுமையாக தாக்கி பேசி இருக்கிறார்.
டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி மீண்டும் மோசமாக விமர்சனம் செய்து கடுமையாக தாக்கி பேசி இருக்கிறார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுக்க முடிவு செய்து இருக்கிறது.
கடந்த சில நாட்களாக, பிரதமர் மோடி தொடர்ந்து மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து மோசமான விமர்சனங்களை வைத்து வருகிறார்.
உத்தர பிரதேச பிரச்சாரத்தில் பேசிய மோடி, ராஜீவ் காந்தியை மிஸ்டர் கிளீன் என்று சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. போபர்ஸ் வழக்கில் சிக்கிய உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று குறிப்பிட்டார்.
அதன்பின், நான் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சவால் விடுகிறேன். உங்கள் குடும்ப ஆதிக்கத்திற்கு ஒரு சவால் விடுகிறேன். உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? முடிந்தால் நீங்கள் ராஜீவ் காந்தியின் பெயரை சொல்லி வாக்கு கேளுங்கள். டெல்லியில் அவர் பெயரை சொல்லி உங்களால் வாக்கு கேட்க முடியுமா? என்று மீண்டும் விமர்சனம் செய்தார. இது காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் தற்போது தனது புதிய பிரச்சாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் ராஜீவ் காந்தியை விமர்சனம் செய்துள்ளார். அதில், ராஜீவ் காந்தி இந்திய ராணுவத்தின் போர் கப்பல்களை தனது டாக்சி போல பயன்படுத்தினார்.
அவர் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்றார். 10 நாள் விடுமுறைக்காக இந்த கப்பலை அவர் தனது குடும்பத்துடன் பயன்படுத்தினார். இது நமது கடலோர எல்லையை பாதுகாக்க உதவும் போர்க்கப்பல். அதை சொந்த கொண்டாட்டத்திற்கு பயன்படுத்தினார்.
இந்திய போர் கப்பல்களில் வெளிநாட்டு மக்கள் செல்ல கூடாது. ஆனால் ராஜீவ் காந்தி தனது இத்தாலி மச்சான்களை அதில் அழைத்து சென்றார். இப்படித்தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருந்தது என்று பிரதமர் மோடி விமர்சனம் வைத்துள்ளார்.
இதை குறித்த கட்டுரை ஒன்றை மோடி ஷேர் செய்து தனது டிவிட்டர் பக்கத்தில் ''இதை அதிகம் பகிருங்கள்'' என்று கோரிக்கையும் வைத்து இருக்கிறார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுக்க முடிவு செய்து இருக்கிறது. இன்றே காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளது.