எம்.பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்- ராஜ்யசபாவில் வெங்கையா நாயுடு விளக்கம்- எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
டெல்லி: ராஜ்யசபாவில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெற போவது இல்லை என சபை தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் எம்.பிக்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவில் வெளிநடப்பு செய்தன.
ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றத்தின் போது பெரும் அமளி ஏற்பட்டது. இதில் சபை தலைவரின் இருக்கையில் இருந்த மைக் உடைக்கப்பட்டது. வேளாண் மசோதாக்களின் நகல்கள் கிழித்து எறியப்பட்டன. சபை தலைவர் இருக்கையில் இருந்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் கூறப்பட்டது.
டீ வழங்கிய ஹரிவன்ஷ் சிங்..ட்விட்டரில் டுவிஸ்ட் வைத்து..பீகார் தேர்தலுக்கு ஸ்கோர் செய்த பிரதமர் மோடி!
சஸ்பெண்ட் எம்.பிக்கள் போராட்டம்
இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரெய்ன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யபட்டனர். இந்த 8 பேரும் நாடாளுமன்ற வளாகத்திலேயே விடிய விடிய அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த எம்.பி.க்களுக்கு ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இன்று டீ கொடுத்து உபசரித்தது வியப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை பிரதமர் மோடியும் பாராட்டி இருந்தார்.
குலாம் நபி ஆசாத் கோரிக்கை
இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். எம்.பிக்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறாவிட்டால் கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்போம் என்றும் குலாம்நபி ஆசாத் கூறினார். மேலும், எம்.பிக்கள் பேசுவதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட வேண்டும்; 2 அல்லது 3 நிமிடங்களில் யாராலும் கருத்தை முழுமையாக தெரிவித்துவிட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார் குலாம்நபி ஆசாத்.
நடவடிக்கை ஏன்? வெங்கையா நாயுடு
இதற்கு ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு பதிலளிக்கையில், தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை எம்.பிக்களுக்கு எதிரானது அல்ல. அவர்களின் செயல்பாடுகளுக்கு எதிரானதுதான். 13 முறை ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கேட்டுக் கொண்டும் எம்.பிக்கள் தங்களது இருக்கைக்கு செல்லாமல் அமளியில் ஈடுபட்டனர். இது ஆரோக்கியமானது அல்ல என கூறினார். வெங்கையா நாயுடுவின் இந்த பதிலை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தேவகவுடா வலியுறுத்தல்
இந்த நிகழ்வுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். இந்த பிரச்சனையில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் என்றார். இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி. டெரிக் ஓ பிரெய்ன், எங்களை சஸ்பெண்ட்தான் செய்ய முடியும்.. எங்கள் குரலை ஒடுக்க முடியாது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.